அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்!
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற நோயாளிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 74 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஜெயலலிதா இருந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், அப்பல்லோ மருத்துவமனையின் கிளை மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.