ஜெயலலிதாவிற்கு 11வது நாள் காரியம் செய்த சசிகலா- நினைவிடத்தில் ஓபிஎஸ் அஞ்சலி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து இன்றோடு 12வது நாள் ஆகியுள்ள நிலையில் அவரது நினைவிடத்தில் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: உடல்நலக்குறைவால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு இதய முடக்கம் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது சமாதியில் தினந்தோறும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா மரணமடைந்து நேற்று 11வது நாள் காரியம் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அமைச்சர்களையும், எம்.எல். ஏ.க்களையும் நேற்று சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தனர்.

11வது நாள் காரியம்
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அதிமுகவின் தலைமை அலுவகம் அருகில் லாயிட்ஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹேமமாலினி திருமண மண்டபத்தில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை 11 மணிக்கு அனைவரும் போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

படையல் உணவு
அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் ஜெயலலிதாவின் படத்தை வைத்து அவருக்கு விருப்பமான உணவுகளை வைத்து படையல் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவருக்கும் உணவு அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சசிகலா விசாரணை
மதிய உணவு முடிந்த பின்னர் அங்கிருந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்களிடம் பேசிய சசிகலா, தொகுதிக்குச் சென்று அங்குள்ள வேலைகளைக் கவனியுங்கள். பொதுமக்களின் குறைகளைக் கேட்டு அதை முறையாக சரி செய்யுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தாராம்.

ஓபிஎஸ் நினைவஞ்சலி
இந்த நிலையில் 12ம் நாளான இன்று ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து போயஸ் தோட்ட இல்லம் வந்த ஓ.பன்னீர் செல்வம் சசிகலா உடன் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications