ஜெ. மரணத்தை ராஜீவ் கொலையோடு ஒப்பிடும் மனநிலை சரியில்லாதவர்கள்- இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் தாக்கு
ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டாம் என்று தான் கூறியதை ராஜிவ் காந்தி கொலை வழக்கோடு ஒப்பிடுவதா? என்று திருநாவுக்கரசர் கேட்டுள்ளார்.
புதுக்கோட்டை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தினர்.
அதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசருக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டாம் என்று நான் சொன்ன கருத்து, அவரோடு பணியாற்றியவன் என்ற துயரத்தில்தான். ஆனால் அந்த கருத்தை சிலர் ராஜிவ்காந்தி கொலை வழக்கோடு ஒப்பிட்டு பேசி இருப்பது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதை காட்டுகிறது.

தனிப்பட்ட கருத்து
அவர்களின் கருத்து ஜீரணிக்க முடியாதது. அவர்களை காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் கருத்து சொல்லும் உரிமையை கட்சி தலைமை எனக்கு வழங்கியுள்ளது. எனது கருத்து தனிப்பட்ட கருத்து என்று சொல்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

அதிமுக பொதுச்செயலாளர்
அதிமுகவில் அடுத்த பொது செயலாளராக யார் வர வேண்டும் என்பதை அக்கட்சியினர்தான் முடிவெடுக்க வேண்டும். அதேபோல் அடுத்த முதல்வரை அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தான் கூடி தேர்ந்தெடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு நிவாரணம்
தமிழகத்தில் ஏற்பட்ட புயலின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு இதுவரை பார்வையாளர் குழுவை அனுப்பவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழகத்திற்கு 5 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்த வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

வைகோவிற்கு வருத்தம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு ஏற்பட்ட சம்பவத்திற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று திருநாவுக்கரசர் கூறினார்.












Click it and Unblock the Notifications