என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது - சொல்கிறார் ஸ்டாலின்
அப்பல்லோவில் ஜெயலலிதாவின் மரணம், இப்போது ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதாக வெளியாகும் செய்திகளை பார்க்கும் போது ஒரே மர்மமாக உள்ளது என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதாக வெளியாகும் செய்தி என எல்லாமே இந்த அரசில் மர்மமாக உள்ளது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று எண்ணூர் துறைமுகப்பகுதிக்கு நேரில் சென்று, இரு கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணிகளை மேற்பார்வையிட்டார். மேலும், இதனால் பாதிக்கப்பட்டு உள்ள மீனவர் குடியிருப்புப் பகுதிகளுக்கும் சென்று, அங்கிருந்த பொதுமக்கள், மீனவ மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், அரசு தரப்பில் இருந்து எதுவும் சொல்லப்படவில்லை. ராஜினாமா செய்ததாக சொல்லப்படும் அந்த செய்தியும் வரவில்லை என்றார்.
என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்ல விரும்புவது, ஓய்வுபெற்று இருக்கக்கூடியவர்களுக்கு தான் அரசு பணியில் இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பணி மூப்பு அடிப்படையில் சில பதவிகளை உருவாக்கித் தர வேண்டிய இந்த அரசு, இதுவரை அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.
இந்த அரசைப் பொறுத்தவரையில் ஒரு மிகப்பெரிய மர்மமான நிலையில் தான் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் என்ன என்பதும் மர்மமாக இருக்கிறது. அவரது மரணம் எப்படி நடந்தது என்பதும் மர்மமாக இருக்கிறது. அதுபோலவே, இப்போது அதிகாரிகள் ராஜினாமாவா, இல்லையா என்பதும் மர்மமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications