3 மாநிலங்கள்... 30 ஆண்டுகள்.. வீழ்த்த முடியாத 'சந்தனக் கடத்தல்' வீரப்பனை சாய்த்த ஜெயலலிதா
சென்னை: தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக கண்ணாமூச்சு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் சகாப்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து சாதனை படைத்தவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
சந்தனக் கடத்தல் வீரப்பன்... தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் சுமார் 6,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 மாநிலங்களுடனும் 30 ஆண்டுகாலம் கண்ணாமூச்சு காட்டிக் கொண்டிருந்தவர். போலீஸ் அதிகாரிகள் உட்பட 150 பேர் படுகொலை, 2,000 யானைகளைக் கொன்று தந்த வேட்டை.. பல்லாயிரம் டன் சந்தன மரங்கள் கடத்தல்...

இப்படி ஒரு தனிராஜாங்கம் நடத்தியவர் வீரப்பன். அவரைப் பிடிக்க படைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தன. ஒருகட்டத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்த் தேசியவாதியாகவும் விஸ்வரூபமெடுத்தார். அவருடன் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தனித் தமிழ்நாடு கோரும் தமிழ்நாடு விடுதலைப் படையினரும் இணைந்து கொண்டனர்.
ராஜ்குமார் கடத்தல்...
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டு தமிழ்த் தேசியம் சார்ந்த நிபந்தனைகளையெல்லாம் விதித்து பரபரப்பை ஏற்படுத்தினார் வீரப்பன். 100 நாட்களுக்கும் மேலாக கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பிணைக் கைதியாக பிடித்து வைத்து கொண்டார்.
கை கோர்த்த கர்நாடகா- தமிழகம்
இப்படியான வீரப்பனைப் பிடிக்க வகுக்கப்பட்ட ஒவ்வொரு வியூகங்களும் தோல்வியில் முடிவடைந்தன. வீர்ப்பன் தலைக்கு விலை வைத்து அறிவித்தும் வேட்டையில் சிக்கவில்லை. காவிரி பிரச்சனையில் எதிரும் புதிருமாக இருந்தாலும் வீரப்பன் விவகாரத்தில் தமிழக- கர்நாடக அதிரடிப்படைகள் கை கோர்த்தன.
வீழ்த்திய அதிரடிப்படை
அதாவது வால்டர் தேவாரம் தலைமையில் 1993-ம் வீரப்பனைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கினார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. ஆனாலும் 11 ஆண்டுகாலம் சவாலாக இருந்த வீரப்பனை 2004-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய அதிரடிப்படைதான் வீழ்த்தியது. அப்போது அதிரடிப்படை தலைவராக விஜயகுமார் இருந்தார்.
வரலாற்றில் முத்திரை
சத்தியமங்கலம் வனப்பகுதியை வனக் கொள்ளையனிடம் இருந்து விடுவித்து வரலாற்றின் பக்கங்களில் முத்திரை பதித்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications