7 ம் வகுப்பில் எனக்கு பென்ஸ் கார் வாங்கி கொடுத்தார் என் தந்தை.. ரெய்டு குறித்து கே சி வீரமணி!
திருப்பத்தூர்: நான் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ 5 லட்சத்திற்கு வாங்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காந்திநகர் பகுதியில் முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி அவரது உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு சொந்தமான 35 க்கும் மேற்பட்ட இடங்களிலும் பெங்களூரில் 2 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த 10 ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
அந்த சோதனையில் தற்போது வரை தோராய மதிப்பாக சுமார் 34 லட்சம் ரொக்க பணம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 7.6 கிலோ வெள்ளி பொருட்கள், 1.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் ஐந்து கணினிகள் ஹார்ட் டிஸ்க்குகள், 275 யூனிட் மணல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
திருப்பத்தூர் தனியார் ஹோட்டல்
இதை மறுத்த கே சி வீரமணி திருப்பத்தூர் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கடந்த 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 3 மணி அளவில் பல பொருட்களை கைப்பற்றியதாக பொய்யான தகவல் அறிக்கையை வெளியிட்டனர்.
300 சவரன் நகை
ஆனால் எனது வீட்டில் 300 சவரன் மதிப்பிலான தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் மின்சார கட்டண ரசீது, மூக்கு கண்ணாடி ரசீது மற்றும் மணல் ரசீது என சொற்ப அளவிலேயே எடுத்துச் சென்றனர்.
பிரமாணபத்திரம்
ஆனால் அந்த தங்க நகைகள் கூட தேர்தல் பிரமாண பத்திரத்தில் அதைவிட அதிகமாக கொடுத்திருந்தால் நகைகளை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர். வீட்டில் இருக்கும் மணலுக்கு கூட முறையாக இரசீது பெற்றுள்ளேன். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்தி உள்ளனர் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த பத்திரிக்கை குறிப்பு முற்றிலும் பொய்யானது.
40 ஆண்டுகள் பழமையான கார்
என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் பழமையானது. அதன் விலை ரூ 5 லட்சம் மட்டுமே. நான் 7ஆவது படிக்கும் போதே எனது தந்தை எனக்கு பென்ஸ் காரை வாங்கி தந்துள்ளார். நான் ஆடம்பரத்தை எப்போதும் விரும்பாதவன். அப்படியிருக்கும் நிலையில் கட்டி கட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதற்கு என கேசி வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இவர், இவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.