வைகோ அண்ணன், விஜயகாந்த் அண்ணன், சுதீஷ் அண்ணன்... பயங்கர சந்தோஷத்தில் கி.வீரலட்சுமி!
சென்னை: விஜயகாந்த்தை வெளியில் பார்க்கவே முடியலையே, எங்கே போனார் என்று பலரும் காத்திருக்க, அவரைப் பார்த்த சந்தோஷத்திலிருந்து இன்னும் விலகாமல் இருக்கிறார் தமிழக முன்னேற்றப்படை தலைவர் கி.வீரலட்சுமி. அதை விட பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடப் போவதை நினைத்தும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
தன் கட்சித தொண்டர்களைக் கூட பார்க்க வருவதில்லை விஜயகாந்த். இந்த நிலையில் அவர் வீரலட்சுமியிடம் பாசத்துடன் பேசினாராம். நன்கு உபசரித்தாராம். இதையும் வீரலட்சுமியே சொல்லிச சொல்லி சந்தோஷப்படுகிறார்.
சமீபத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தவர் வீரலட்சுமி. முதலில் வைகோவை மட்டுமே அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் வைகோதான், தேமுதிக அலுவலகத்திற்குக் கூட்டிப் போய் விஜயகாந்த்தையும் சந்திக்க வைத்து வீரலட்சுமியை பெருமைப்படுத்தி விட்டார்.
பயங்கர சந்தோஷம்
விஜயகாந்த்தை சந்தித்து விட்டு வந்தது குறித்து பெரும் உற்சாகம், மகிழ்ச்சியோடு காணப்படுகிறாராம் வீரலட்சுமி. தனக்கும், தனது அமைப்புக்கும் பெரிய அங்கீகாரம் இது என்றும் அவர் வருவோர் போவோரிடமெல்லாம் உற்சாகமாக கூறுகிறாராம்.
விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்
விஜயகாந்த் தன்னை நன்றாக உபசரித்ததாகவும், தன்னிடம் நன்றாகப் பேசியதாகவும், தனது போராட்டங்களைக் குறிப்பிடடுப் பாராட்டிப் பேசியதாகவும் கூறினார் வீரலட்சுமி.
வைகோ அண்ணன் சுதீஷ் அண்ணன்
வாய்க்கு வாய் வைகோ அண்ணன் புகழ் பாடுகிறார் வீரலட்சுமி. அதை விட விஜயகாந்த்தைப் பார்க்கப் போன இடத்தில் சுதீஷ் அண்ணனும் தன்னைப் பாராட்டியதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் வீரலட்சுமி.
ஒரு சீட்டில் மட்டுமல்ல
தனது கட்சிக்கு ஒரு சீட் கிடைக்கும என்று கூறியுள்ள வீரலட்சுமி, ஒரு சீட்டில் போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறப் பாடுபடப் போவதாக கூறியுள்ளார் வீரலட்சுமி.
முதல்வராகவும் ரெடியாம்!
எல்லோரையும் போலவே முதல்வர் ஆசை வீரலட்சுமியையும் விடவில்லை. முதல்வர் வேட்பாளராக தன்னை நிறுத்தினால் அதை தான் ஏற்றுக் கொள்வேன் என்றும் தைரியமாக கூறுகிறார் வீரலடசுமி.
பரவாயில்லையே!