கருணாநிதி ஒரு பல்கலைக் கழகம்... 100 ஆண்டுகள் வாழ்வார்: வீரமணி Exclusive
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிட கழக தலைவர் கி வீரமணி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிட கழக தலைவர் கி வீரமணி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கருணாநிதியை வாழ்த்தி பேசியுள்ளார்.
இந்தியா முழுக்க திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுக தோழமை கட்சி தலைவர்கள் அவரை குறித்து ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளனர்.

கி வீரமணி வாழ்த்து
அவர் அளித்த பேட்டியில், 95வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அரசியலில் யாருக்கும் ஒப்பற்றவர் கலைஞர் கருணாநிதி. கலைஞரும் நானும் 73 ஆண்டுகள் நட்பில் இருக்கிறோம். அவருடைய பொதுவாழ்க்கை 83 ஆண்டுகள். மாணவர் பருவத்தில் இருந்து நாங்கள் நண்பர்கள். எல்லா நேரத்திலும் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்துள்ளோம்.

பல்கலைக்கழகம்
கலைஞர் ஒரு பல்கலைக்கழகம். எழுத்து, பேச்சு, சட்டமன்றம், போராட்ட களம், திரைப்படம் எல்லாவற்றையும் பார்த்தவர். எல்லாவற்றிலும் அவருக்கு வருமானத்தை விட கொள்கைதான் முக்கியம். வறுமை காலத்தில் கூட சிறு வயதில் கொள்கைக்காக பிரச்சாரம் செய்துள்ளார். 1946ல் நிறைய நாடகங்களில் நடித்துள்ளார். உணர்ச்சிபூர்வமான பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். பல எதிர்ப்புகளுக்கு இடையில் நாடகங்களில் நடித்துள்ளார்.

கலைஞரின் உழைப்பு
தந்தை பெரியார் கலைஞருக்கு ஆறுதலாக பல சமயங்களில் இருந்துள்ளார். கலைஞர் அவர்களின் உழைப்பிற்கு ஈடு இணையே இல்லை. நெருக்கடி காலத்தில் அவர் திமுகவை சிறப்பாக கட்டிக்காத்தார். திமுகவை பலர் அழிக்க நினைத்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் அவர் தாங்கி நின்றார். அவர் ஒவ்வொரு கட்டமாக தாண்டி தாண்டி இயக்கத்தை வளர்த்தார்.

சுயமரியாதைகாரன்
அவரை பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி கண்ட போது, தன்னை குறித்து ஒருவரியில் குறிப்பிட்டார். தன்னை ஒரு மானமிகு சுயமரியாதைகாரன் என்று பிரகடனம் செய்து கொண்டவர். பெரியாருக்கு எல்லா எதிர்ப்புகளையும் மீறி அரசு மரியாதை செலுத்த வைத்தார். பெரியருக்காக ஆட்சி கலைக்கப்பட்டாலும் கூட, எப்போதும் பெரியார் பக்கமே நிற்பேன் என்று கலைஞர் கூறி இருந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக துறையையே கொண்டு வந்தவர் கலைஞர்தான்.

சிறுபான்மையினருக்கு வாய்ப்பு
சிறுபான்மையினருக்கு பல வாய்ப்புகளை கலைஞர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பெரியாரின் சமூக நீதிக்கு அரசியல் வாய்ப்பு கொடுத்தவர் கலைஞர். நாலாந்தர மக்களுக்கான அரசு என்று சட்டசபையிலேயே பேசினார். கலைஞரின் இப்போதைய மவுனமே அவரது பேச்சு, அதுவே பெரிய விடை. அவர் என் கேள்விகளுக்கு புன்னகை செய்கிறார். அவர் நோயோடும் போராடி வெற்றிபெற்றுள்ளார். தேர்தல் போல இதிலும் வெற்றிபெற்றுவார். தற்போது பெரியாரின் வயதை தொட்டுள்ளார். அவர் நூற்றாண்டையும் காணுவார். சுயமரியாதைகாரர்கள் நூறாண்டு வாழ்வார்கள், என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications