நான் அவனில்லை பட பாணியில் மோசடி- 8 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது
கோவையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி 8 பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டிய மோசடி மன்னன் புருஷோத்தமனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
கோவை: மறுமணம் என்ற பெயரில் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய மோசடி மன்னன் புருஷோத்தமனை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமணம் என்ற பெயரில் இன்றைக்கு தில்லாலங்கடி செய்து ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில் கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ருதி கைது செய்யப்பட்ட நிலையில் இப்போது பெண்களை ஏமாற்றிய புருஷோத்தமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். முதல் மனைவியை இழந்த புருஷோத்தமனுக்கு 57 வயது ஆகிறது. 20 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் இருக்கிறார். இரண்டாவது திருமணம் என்ற பெயரில் இவர் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார்
திருமணம் செய்து மோசடி
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குமுத வள்ளி, கணவரை இழந்த இவர் காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூரை சேர்ந்த புருசோத்தமனை சந்தித்தார். புருஷோத்தமனுக்கு பெண்களை ஏமாற்றுவதுதான் பிரதான தொழில். இதற்கு திருமண தகவல் மையத்தினரும் உடந்தை.
திருமணம் செய்து மோசடி
புருசோத்தமன் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தன்னுடைய மனைவி இறந்து விட்டதால் கல்லூரியில் படிக்கும் தன்னுடைய மகளை பார்க்க ஆள் இல்லை என்பதால் மறுமணம் செய்வதாகவும் கூறினார். இதனை உண்மை என நம்பிய குமுதவள்ளி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புருசோத்தமனை திருமணம் செய்து கொண்டார்.
ரூ. 3 கோடி சுருட்டிய நபர்
சில நாட்களில் புருசோத்தமன் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி குமுத வள்ளியிடம் இருந்து ரூ. 3 கோடி வாங்கினார். அதன் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த குமுத வள்ளி. புருசோத்தமன் குறித்து விசாரித்த போது அவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது.
8 பெண்கள் ஏமாந்தனர்
இது குறித்து குமுதவள்ளி போத்தனூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது புருசோத்தமன் தொழில் அதிபர் என கூறி கோவையை சேர்ந்த சபிதா, உஷாராணி, விமலா, சுசீலா, சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியை இந்திரா காந்தி, ஈரோட்டை சேர்ந்த சித்ரா மற்றும் குமுதவள்ளி உள்பட 8 பேரை தாலி கட்டி திருமணம் செய்து அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சுருட்டியதும் தெரியவந்தது.
தம்பதியினர் கைது
புருசோத்தமனின் மகள் கீதாஞ்சலியும் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மெட்டி ஒலி திருமண தகவல் மையத்தை நடத்தி வந்த கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மோகனன்,65, அவருடைய மனைவி வனஜாகுமாரி,53 ஆகிய இருவரையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். தலைமறைவான புருஷோத்தமன் பற்றி விசாரித்தனர்.
கல்யாண மன்னன் கைது
புருசோத்தமன் 8 பெண்களை மட்டும் தான் ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்தாரா? அல்லது வேறு பெண்களையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது தொடர்பாகவும் கைதான தம்பதியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இரண்டாவது திருமணத்திற்காக தயாராக இருக்கும் பணக்கார பெண்கள் ஒவ்வொருவரிடம் விதவிதமான பொய்களைக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த புருஷோத்தமனை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
நான் அவனில்லை
நான் அவனில்லை சினிமா பட பாணியில் கடந்த 30 ஆண்டிற்கு மேலாக புருஷோத்தமன் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. திருமணம் செய்த பெண்களிடம் ரூ.15 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவானதும் வெவ்வேறு பெயர்களில் பெண்களை திருமணம் செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற நபர்களுக்கு சரியான தண்டனை தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.