கருத்து கேட்டதற்கே கைது.. இது சர்வாதிகாரம்.. யோகேந்திர யாதவுக்காக கொந்தளிக்கும் கமல்ஹாசன்
Recommended Video
திருவண்ணாமலை: சென்னை-சேலம் நடுவே அமைக்கப்பட உள்ள ரூ.1000 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை சந்திக்க யோகேந்திர யாதவ் இன்று சென்றார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.
யோகேந்திர யாதவை சந்திக்க காத்திருந்த விவசாயிகளையும் கூட போலீசார் கைது செய்தனர். திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட யோகேந்திர யாதவ், மாலையில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது விவசாயிகளை சந்திக்க அவர் முயன்றதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், கமல்ஹாசன் ட்விட்டரில் வீடியோ மூலம் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கச் சென்ற நண்பர் திரு @_YogendraYadav கைது செய்யப்பட்டது விமர்சனத்துக்குரியது, கடும் கண்டனத்துக்குரியது. pic.twitter.com/JmwJz7HIQo
— Kamal Haasan (@ikamalhaasan) September 8, 2018
கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: வெளிமாநிலத்தில் இருந்து நமது விவசாயிகளிடம் கருத்து கேட்க வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இது கண்டனத்திற்கு உரியது.
கருத்து கேட்டதற்கு கூட கைது செய்யும் இந்த அதிகாரம் எப்படி இவர்களுக்கு வந்தது. சட்டத்தை ஒரு உதாரணமாக சொல்லி, குரல்களே எழாமல் செய்யும் வேலை சர்வாதிகாரம் என்றே தோன்றுகிறது.
இது ஜனநாயக நாடுதான் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் வழியாகத்தான் சர்வாதிகாரிகள் உலகெங்கும் ஆட்சியை பிடித்துள்ளனர் என்பதை நினைவு கொள்ளவும். மக்கள் கருத்துக்களை தெளிவாக பயமின்றி எடுத்துச் சொல்லும் சூழல் வர வேண்டும். அப்படி வராவிட்டால், வர வைக்க வேண்டும். நண்பர், சகோதரர் யோகேந்திர யாதவ் கைது கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.