பிக்பாஸ் நிகழ்ச்சி... சந்தடி சாக்கில் அதிமுக இணைப்பை கிண்டல் செய்த கமல்ஹாசன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தடி சாக்கில் அதிமுக இணைப்பு குறித்து நடிகர் கமல் ஹாசன் கிண்டல் செய்தார்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தடி சாக்கில் அதிமுக இணைப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கிண்டல் செய்தார். இதற்கு பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர்.
நடிகர் கமல் ஹாசனுக்கும், அதிமுக அரசுக்கும் கடந்த சில மாதங்களாக சுமூகமாக இல்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பது என்று அவர் கூறிய கருத்தால் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் கொந்தளித்தனர்.
அதில் அமைச்சர்கள் ஜெயக்குமாரோ , வெளியில் இருந்து பார்த்தால் அரசியல் என்பது விமர்சனம் செய்யும் அளவுக்குதான் இருக்கும். உள்ளே வந்து பார்த்தால் அதுஎத்தகைய முள் படுக்கை என்பது தெரியும் என்று வீரவசனங்களை பேசினார்.
அரசியலுக்கு வரட்டும்
கமல் அரசியலுக்கு வந்துவிட்டு இந்த கேள்விகளை கேட்கட்டும். அதற்கு பதில் கூறுகிறோம் என்று அதிமுக அமைச்சர்கள் நழுவினர். அப்படியும் விடாமல் சுதந்திர தினத்தன்றும் கமல் ஹாசன் தனது டுவிட்டரில் குற்றங்களை தடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றார். மேலும் ஊழலுக்கு சுதந்திரம் கிடைக்காத வரை நாம் அனைவரும் அடிமைகளே என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில்...
கமல் ஹாசன் அவ்வப்போது சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அதிமுக அரசை விமர்சித்து பேசுவார். அந்த நிகழ்ச்சியில் இருந்து நமீதா வெளியேற்ற செய்யப்பட்ட போது பிக்பாஸ் வீடு எப்படி இருந்தது என்று கமல் கேட்டார்.
பைவ் ஸ்டார் ஜெயில்...
நமீதாவோ பைவ் ஸ்டார் ஜெயில் போன்று உள்ளது என்றார். அதற்கு கமல், இதை விட பெரிய பெரிய பைவ் ஸ்டார் ஜெயில் எல்லாம் வெளியே இருக்கு என்று பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வசதிகளை பெற சசிகலா லஞ்சம் கொடுத்தது குறித்து பேசினார்.
காயத்ரியின் சேரி பிஹேவியர்
காயத்ரி சேரி பிஹேவியர் என்று கூறியதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு காயத்ரி, கமல் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கையெல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று தனது நிகழ்ச்சியில் கூறிக் கொண்டே இருப்பார்.
அதிமுக இணைப்பு
பிக்பாஸ் வீட்டில் நேற்றைய நிகழ்ச்சியில் நீதிமன்றம் போல் அரங்கு அமைக்கப்பட்டு அதில் ஒரு போட்டியாளர் செய்த தவறை சுட்டிக் காட்டி மற்றொரு போட்டியாளர் வழக்கறிஞர் போல் வாதாட வேண்டும். இதை கமல் அறிவித்ததும் வையாபுரி, இவுங்க குறையே சொல்ல மாட்டாங்க.... நண்பர்கள் என்று கடைசியில் கை குலுக்கி விடுவார்கள் என்றார். அதற்கு கமல் ஹாசன், பின்னால் புறங்கூறிவிட்டு நேரில் கைகுலுக்குவது நல்லாவா இருக்கு என்று கூறி பார்வையாளர்களை பார்த்து கண் அசைவை காண்பித்தார். அரங்கே கரகோஷத்தால் அதிர்ந்தது. அதிமுக இணைவதற்கு முன்னர் ஒருவர் மீது ஒருவர் குறை கூறியதும் தற்போது ஒன்றிணைந்ததையும் கமல் கிண்டல் செய்ததாகா புரிந்து கொள்ளப்பட்டது. அதிமுக அணிகள் இணைந்த போதும் ட்விட்டரில் கமல் பகிரங்கமாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.