மக்களுக்காக போராடாத ரஜினியும், கமலும் பகல் கனவு காண்கிறார்கள்.. தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி
முதல்வராவது குறித்து கமலஹாசனும், ரஜினிகாந்தும் பகல் கனவு காண்பதாக தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : எந்த ஒரு மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாத கமலஹாசனும், ரஜினிகாந்தும் தமிழக முதல்வராவது குறித்து பகல் கனவு காண்கிறார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டு உள்ளார்.
டி.டி.வி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, மக்கள் போராட்டதிற்கு இறங்கி வந்து போராட துணிச்சல் இல்லாத கமலஹாசன், ரஜினிகாந்த் இருவரும் தமிழக அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அரசியல் பற்றி ஒரு வார்த்தை பேசாத நடிகர்களான கமலஹாசனும், ரஜினிகாந்தும் இப்போது பேசக் காரணம் அரசியலில் ஏற்பட்டு இருக்கும் வெற்றிடம் தான். அதனை பயன்படுத்தி முதல்வர் ஆகிவிடுவது குறித்து கனவு காண்கிறார்கள். ஆனால் இந்த பகல் கனவு எதற்கும் உதவாது.
கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிப்புகள், விவசாய பாதிப்புகள் என மக்களின் எந்த பிரச்னை குறித்தும் இவர்கள் வாய் கூட திறக்கவவில்லை. நேரடியாகவும் சென்று சந்திக்கவும் இல்லை. இதே போல் தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பத்து நாட்கள் போராட்டம் நடத்தினார்கள் அது குறித்தும் எந்த அறிக்கையும் வெளியிடவும் இல்லை.
இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் போராடவும், குரல் கொடுக்கவும் துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.