உங்கள் எம்.எல்.ஏக்கள் பெற தகுதியான 'மரியாதையை' கொடுங்கள் மக்களே.. கமல் ஆவேசம்
சென்னை: தமிழக மக்கள் தங்களது எம்.எல்.ஏக்களுக்கு உரிய வகையில் 'மரியாதை' கொடுக்குமாறு நடிகர் கமல்ஹாசன் ஆவேசம் வெளிப்படுத்தியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா கோஷ்டியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். திமுகவினர் செய்த கடும் அமளிக்கு பிறகு அவர்களை வெளியேற்றிவிட்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
எதிர்ப்பு தெரிவிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் உட்பட அவர் அணியின் 11 பேர் தெரிவித்தனர். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது.
இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் கமல் வெளியிட்ட ஒரு டிவிட்டில், "தமிழக மக்களே, உங்கள், உங்கள் தொகுதிகளின் எம்.எல்.ஏக்களுக்கு அவர்கள் பெற தகுதியான மரியாதையை அளித்து வரவேற்பு கொடுங்கள்" என கூறியுள்ளார்.
People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home
— Kamal Haasan (@ikamalhaasan) February 18, 2017
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக தங்கள் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க தமிழக மக்களில் பலருக்கும் விருப்பம் இல்லை என்பது சோஷியல் மீடியா பதிவுகள் மூலம் அம்பலமானது. ஆனால் மக்களிடம் கருத்தை கேட்காமலேயே இப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் கமல் இவ்வாறு கோபத்தில் டிவிட் செய்துள்ளார்.