பொய் வழக்கை எதிர்த்து கோர்ட்டில் மனு...கனகராஜ் சகோதரர் தனபால் முடிவு
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கனகராஜிற்கு தொடர்பிருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என்று அவரது சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார்.
சேலம் : கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாக சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜ் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவில் உள்ள பொருட்களை திருடுவதற்காக நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளைக்கு காரணமானவர்களை தனிப்படை போலீசார்தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான கனகராஜ் என்பவர் தான் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதாக போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களை பிடிக்க கேரளா மற்றும் சென்னைக்கு தனிப்படை விரைந்த நிலையில் போலீசாரிடம் சரணடைய சென்ற போது சேலம் அருகே கனகராஜ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.
கனகராஜ் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அவரின் சகோதரர் தனபால், விபத்து நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் சாலை விபத்து ஏற்படுவதற்கான எந்த வாய்ப்புகளுமே இல்லை என்றார். திட்டமிட்டே கனகராஜ் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் பொய் வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாகவும் தனபால் கூறினார்.












Click it and Unblock the Notifications