டான் ஸ்ரீதர் தற்கொலையால் பதற்றத்தில் காஞ்சிபுரம்... கூட்டாளிகள் 10 பேர் கைது!
தமிழக தாவூத் ஸ்ரீதர் தனபாலன் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து காஞ்சிபுரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
காஞ்சிபுரம் : ரவுடி ஸ்ரீதர் தனபாலன் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது, இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேரை போலீசார் தடுப்புக் காவலில் கைது செய்துள்ளனர்.
கள்ளச்சாராய வியாபாரியாக இருந்து ரியல் எஸ்டேட் தாதாவான தனபாலன் ஸ்ரீதர், தமிழகத்தின் தாவூத் என அழைக்கப்பட்டவர். இவர் மீது 7 கொலை, 14 கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்பட 43 வழக்குகள் இருக்கிறது.
தமிழக போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டதை அறிந்த ஸ்ரீதர், 2013ல் துபாய்க்கு தப்பியோடினார். ஆனால், இன்டர்போல் மூலம் காவல்துறை ஸ்ரீதரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இதனால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஸ்ரீதர் நேற்று கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வெளியாகின.

முன்எச்சரிக்கையாக கைது
ஸ்ரீதரின் தற்கொலையை அடுத்து காஞ்சிபுரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக ஸ்ரீதரின் கூட்டாளிகள் 10 பேரை போலீசார் தடுப்புக் காவலில் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஸ்ரீதரின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பாஸ்போர்ட் இல்லை
இதனிடையே ஸ்ரீதரிடம் இந்தியாவிற்குள் வருவதற்கான பாஸ்போர்ட் இல்லாததாலேயே அவர் உலக நாடுகளில் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. துபாயில் இருந்த ஸ்ரீதர் போலி பாஸ்போர்ட் மூலம் கொழும்பு வழியாக கம்போடியா சென்றுள்ளதாகத் தெரிகிறது.

போலீசார் ஆலோசனை
இதனால் இறந்த ஸ்ரீதரின் உடலை தமிழகம் கொண்டு வருவதிலும் சிக்கல் நிலவுகிறது. இதனால் இந்த பிரச்னையை சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு எவ்வாறு சட்ட ரீதியில் இந்தப் பிரச்னையை கையாள்வது என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நாளை உடல் கொண்டுவரப்படுகிறதா?
இறந்த ஸ்ரீதரின் மனைவியும், மகனும் தமிழகத்தில் தான் உள்ளனர். ஆனால் ஸ்ரீதரின் வழக்கறிஞர் கம்போடியா சென்றுள்ளதாகவும் அவரது உடலைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் காஞ்சிபுரம் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஸ்ரீதரின் உடல் நாளை தமிழகம் கொண்டு வரப்படும் என்று ஸ்ரீதரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications