கோவில் நகரமான காஞ்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளும் பின்னணியும்!
ஆன்மீக நகரமாக காஞ்சிபுரத்தில் மீண்டும் கொலைகள் அரங்கேறிவருவது மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
காஞ்சிபுரம்: கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் அரங்கேறியுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆன்மிக நகரமாக திகழும் காஞ்சிபுரம், தொடர் கொலைச் சம்பவங்களால் திகில் நகரமாக மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இமயம் ரவி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தை பரபரப்புக்குள்ளாக்கியது. தற்போது மீண்டும் பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு கொலைகள்
கடந்த 5ஆம் தேதி மொட்டுக்கள் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சந்திரசேகர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து 2 தினங்கள் கூட ஆகாத நிலையில் தேமுதிக நகர அவைத் தலைவர் சரவணன் தற்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சந்திசேகர் ஃபேஸ்புக் பதிவு
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சந்திரசேகர் ஃபேஸ்புக் பதிவில் பூனைக்கதை போட்டிருந்தார். அதில்,
மீயாவ்! மீயாவ்!!
சில பூனை குட்டி தன்னோட நிழலை பார்த்து தன்னை சிங்கமாக நினைத்து மற்றவர்களையும் தன்னை சிங்கம்னு சொல்லனும் சொல்லி வச்சு அப்படியே சிங்கமா வாழனும் நினைப்புல இருந்தபோது, அந்த பூனை மீது தீடீர்னு பச்சை தண்ணீரை ஊத்தின அப்போ பயத்துல கண் காணாத இடத்துல ஒடிப்போச்சு.
Moral: வெந்நீரை கண்ட பூனை பச்சை தண்ணீரை கண்டாலும் பயப்படும். இங்கு இப்படியும் சில தொடை நடுங்கி பூனைகள் .
இந்த பதிவு சிலரை கோபத்தில் ஆழ்த்தியது.
ரவுடியின் ஆடியோ
இதேபோல பிரபல ரவுடியின் ஆடியோவை கேளுங்கள் என்று ஏப்ரல் 4ஆம் தேதி பதிவிட்டிருந்தார் சந்திரசேகர். இது சிலரை உசுப்பிவிடவே அவர் 5ஆம்தேதியன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ரியல் எஸ்டேட் ரவுடிகள்
காஞ்சிபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் சமூக விரோதிகள் பலர் ஊடுருவியுள்ளனர். இதுவே காஞ்சிபுரத்தில் நடைபெறும் பல குற்ற நடவடிக்கைகளுக்கு மூலமாக அமைந்துள்ளது. அதேபோல் மதுபானக் கடைகளுக்கு அருகே உள்ள மது அருந்தும் கூடங்களை ஏலம் எடுப்பதிலும் ரவுடிகள் ஆதிக்கம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுவதற்காக பல்வேறு கூலிப் படையினர் காஞ்சிபுரத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் உள்ளூர் ரவுடிகளுடன் சேர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது சமூக ஆர்வலர்களின் புகாராகும்.

ரவுடி ஸ்ரீதருக்கு தொடர்பா?
இதனிடையே சந்திரசேகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி ஸ்ரீதருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கில் அவர் போட்டிருந்த பதிவு மறைமுகமாக ஸ்ரீதரை தாக்கித்தான் என்றும், அவரது அடியாளான திருப்பருத்திக் குன்றம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வெங்கடேசனையும் மறைமுகமாக விமர்சித்ததே கொலைக்குக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்கெட்ச் போட்டு கொலை
தாசில்தார் மகன் எல்லப்பன் கொலை வழக்கில் ஸ்ரீதர் பெயர் அடிபடுகிறது. இதற்கு காரணம் அப்ரூவராக மாறிய தினேஷ்தான் என்கிறார்கள். ஸ்ரீதர் பற்றிய ரகசியங்கள் சந்திரசேகர் வசம் உள்ளதே இந்த கொலைக்கு காரணம் என்றும், கடந்த ஒரு மாதமாகவே ஸ்கெட்ச் போட்டு கொலையை அரங்கேற்றியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

சரவணன் கொலை
அடுத்த இரு தினங்களில் தேமுதிகவை சேர்ந்த சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையின் பின்னணியிலும் ரியல் எஸ்டேட் ரவுடிகள் இருப்பதாகவே குற்றம் சாட்டுகின்றனர். ரியல் எஸ்டேட் ரவுடிகளால் இன்னும் எத்தனை தலைகள் உருளப்போகிறதோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் காஞ்சிபுரம் நகர மக்கள்.












Click it and Unblock the Notifications