தேமுதிக மாநாடு... திமுக பொதுக்கூட்டம் இனி 2 நாட்களும் களைகட்டப்போகுது காஞ்சிபுரம்
சென்னை: தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு, திமுகவின் உறுதி முழக்கப் பேரணி என நாளையும், நாளை மறுதினமும் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் நடைபெறப்போகும் அரசியல் கட்சி கூட்டங்களால் அலறப்போகிறது காஞ்சி மாவட்டம்.
சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது தமிழகம். விருப்பமனுக்கள் முடிந்து வேட்பாளர் நேர்காணலுக்கு தயாராகி வரும் அதே நேரத்தில் காஞ்சிபுரம் அருகே வேடலில் மிக பிரம்மாண்டமான மாநாடு நாளை நடத்தப் போகிறார் தேசிய முற்போக்கு திராவிடர் கழக தலைவர் விஜயகாந்த்.
அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 'நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்' மேற்கொண்ட ஸ்டாலின், தனது பயணத்தின் வெற்றியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அருகே உள்ள ஆப்பூரில் உறுதி முழக்க பேரணியும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடத்த உள்ளனர். அடுத்தடுத்த நடைபெறப்போகும் அரசியல் கட்சி மாநாடுகள், பொதுகூட்டம் என்ன தொண்டர்களால் களை கட்டப் போகிறது காஞ்சிபுரம் மாவட்டம்.

கோட்டை முகப்பில் மாநாடு பந்தல்
காஞ்சிபுரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில் தே.மு.தி.க.வின் மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மாநாட்டிற்காக செங்கோட்டை வடிவில் 110 அடி நீள பிரம்மாண்ட முகப்பு அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு பந்தலில் 80 அடி நீளமும், 40 அடி அகலமும் உள்ள மேடை அமைக்கப்படுகிறது.

பல்லவர் கால சிற்பங்கள்
பந்தல் முழுவதும் பல்லவர் கால சிற்ப வடிவமைப்பில் அலங்கார வளைவுகளும், பிளாஸ்டர் ஆப்பாரிசினால் செய்யப்பட்ட யானை, குதிரை பொம்மைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

200 ஏக்கர் ஒதுக்கீடு
மாநாட்டில் கலந்து கொள்ள சுமார் 10 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடம் 80 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. வாகனங்கள் நிறுத்த வசதிக்காக 200 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு, ஆம்புலன்சுக்கு தனி இடமும், தே.மு.தி.க. மருத்துவர் அணி மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் குழுவும் மாநாட்டு பந்தலில் இருப்பார்கள்.

அழைப்பிதழ் விநியோகம்
மாநாட்டிற்காக 49 செ.மீ. அகலம் 70 செ.மீ. உயரமும் உள்ள அழைப்பிதழ் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு துணிந்திடு, தவறுகளை களைந்திடு, புதிய மாற்றத்திற்கான ஆரம்பம், ஒன்றிணைவோம்,, வென்றிடுவோம்,, காஞ்சி குலுங்கட்டும். காலம் கனியட்டும். ஆட்சி மாறட்டும் என்ற வாசகங்களுடன் அமைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றது.

ஸ்பெஷல் உணவு
காஞ்சிபுரம் அடுத்த அம்பி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநாட்டிற்கு வருபவர்கள் தங்கவும். உணவு அளிக்கவும் அக்கட்சியின் நகரமன்ற உறுப்பினர் சாட்சி சண்முகசுந்தரம் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்துள்ளார்.

கூட்டணி அறிவிப்பு
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்று மாநாட்டில் கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இம்மாநாடு தேமுகவினருக்கு மட்டுமின்றி பிற அரசியில் கட்சியினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திமுக பொதுக்கூட்டம்
இதே நேரத்தில் திமுக சார்பில் வரும் 21ம் தேதி சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆப்பூரில் உறுதி முழக்க பேரணியுடன் மாபெரும் பொதுக்கூட்டமும் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர்.

திரளப் போகும் திமுகவினர்
இந்த பொதுக்கூட்டத்தை மாபெரும் மாநாடு போல பிரம்மாண்டமாக நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளதால் தமிழகம் முழுவதிலும் இருந்தும் தொண்டர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, தேமுதிக மாநாடு, பொதுக்கூட்டங்களினால் சனி, ஞாயிறுகளில் காஞ்சிபுரம் களை கட்டப் போகிறது.












Click it and Unblock the Notifications