அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு பொங்கல் சாப்பிட்டேன்.. பேஷ் பேஷ்... சொல்வது கர்நாடக அமைச்சர்!
சென்னை: அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு பொங்கல் சாப்பிட்டேன், ரொம்ப டேஸ்ட்டாகவும், போதுமான அளவும் இருந்தது என பாராட்டியுள்ளார் கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இதில் மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார்.
முந்தைய கால காங்கிரஸ் அரசுகளிலும் சிவகுமார் அமைச்சராக பதவி வகித்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி செயல் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பதால் அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் புள்ளி அவர்.

தொழிலதிபர்
பெங்களூர் அடுத்த கனகபுரா பகுதியை சேர்ந்த சிவகுமார் பெரும் தொழிலதிபரும் ஆவார். கிரானைட் தொழில், ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

அதிரடி பாணி
தமிழகத்தை போலன்றி, கர்நாடகாவில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் படாடோபம் இன்றியே அரசியல் நடத்துபவர்கள். இதற்கு காரணம், இங்கு தேசிய அரசியல் கோலோச்சி இருப்பது. ஆனால் சிவகுமார் மட்டும் தமிழக அரசியல் தலைவர்கள் பாணியில் அரசியல் நடத்துபவர்.

சோனியா செல்லப்பிள்ளை
சித்தராமையா தலைமையில் அரசு அமைந்ததும், சிவகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்க அவர் மறுத்துவிட்டார். ஊழல் புகார் இருப்பதால் அமைச்சர் பதவி தர முடியாது என சித்தராமையா பிடிவாதம் காட்டினார். ஆனால் சோனியாவை டெல்லியில் சிவகுமார் சந்தித்து பேசிய சில நாட்களிலேயே அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் முதல்வரான, சித்தராமையா.

அம்மா உணவகத்தில் சாப்பாடு
இப்படியெல்லாம், செல்வாக்கும், படாடோபமும் கொண்ட சிவகுமார், சென்னை அருகே அம்மா உணவகத்தில் வந்து 5 ரூபாய்க்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

போரூரில் பொங்கல்
காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட ராஜிவ்காந்தி ஜோதி யாத்திரை பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அவரது நினைவிடத்திற்கு சென்றது. அப்போது அதனுடன் வந்த சிவகுமார், போரூரிலுள்ள அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

சுவை, திடம்
சாப்பிட்ட பிறகு அதுகுறித்து சோஷியல் மீடியாவில் கருத்தும் கூறியுள்ளார் சிவகுமார். அம்மா உணவகத்தில் சாப்பிட்ட 5 ரூபாய் பொங்கல், சுவையானதாகவும், போதிய அளவுக்கு இருந்ததாகவும் புகழாரம் சூட்டி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சிவகுமார்.

ஜெயலலிதா ஆதரவாளர்
சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்த பிறகு, கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாமா என யோசித்துக்கொண்டிருந்தது. அப்போது, மேல்முறையீடு செய்ய கூடாது என பகிரங்கமாகவே கூறியவர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications