கார்த்தி சிதம்பரம் கைது- ஐஎன்எஸ் வழக்கில் சென்னை விமான நிலையத்தில் சிபிஐ கைது செய்தது
கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ கைது செய்தது.
Recommended Video
சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ கைது செய்தது.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கார்த்திக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றம்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கார்த்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
சென்னை திரும்பினார்
இதைத் தொடர்ந்து கார்த்தி வெளிநாடு செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பேரில் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர் இன்று காலை சென்னை திரும்பினார்.
ஆடிட்டர் கைது
அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விவகாரத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார்.
முன்ஜாமீன் ரத்து
முன்னதாக இந்த வழக்கில் ஆஜராக கோரி ஏற்கெனவே கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி அதை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில் தற்போது திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.