27% இட ஒதுக்கீடு விவகாரம்: ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு கருணாநிதி பதில்
சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த புகாருக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை விவரம்:
கேள்வி: ' எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டம் குறித்து சில தவறான தகவல்களை கருணாநிதி தெரிவித்ததற்கு நான் விரிவாகப் பதில் அளித்திருந்தேன்' என்று ஜெயலலிதா சங்கரன்கோவிலில் பேசியிருக்கிறாரே?
பதில்: மார்ச் 13-ந் தேதியன்று முதல்வர் அளித்த விளக்கத்தில், ‘எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டம் என்னால் (ஜெயலலிதாவால்) 29-3-2012 அன்று அறிவிக்கப்பட்டது. எந்த ஒரு மின் திட்டத்தை அறிவித்தாலும், அதைத் துவக்குவதற்கு முன் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பல்வேறு அனுமதிகள் பெற வேண்டும். மத்திய அரசின் அனுமதி 24-1-2013 அன்று கிடைத்தது. இதன் பின்னர் ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக லான்கோ இன்ப்ரா டெக் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.
இதற்கான பணி ஆணையினை மேற்படி நிறுவனத்திடம் 27-2-2014 அன்று நான் வழங்கினேன்' என்று பேசியிருந்தார். நான் கூறியதைத்தான் ஏற்றுக்கொண்டு ஜெயலலிதா அப்படியே பேசியிருக்கிறாரே தவிர, தவறான தகவல்கள் என்று எதையும் குறிப்பிட்டுக் கூறவில்லை.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு
கேள்வி: சங்கரன்கோவிலில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இன்று வரை பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படாமல், மத்திய அரசின் ஏ,பி,சி,டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். இதைத் தீர்க்க தி.மு.க. மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., இதுபற்றி மத்திய அரசை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறாரே?
பதில்: இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமானது. சமூக நீதியின் ஓர் அடிப்படைக் கூறுதான் இட ஒதுக்கீடு. மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் 12-5-1989 அன்று நான் முதல்வராக இருந்த போது, தி.மு.க. ஆட்சியில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2006-ம் ஆண்டு தமிழக முதல்வர் பொறுப்பிலே 5-வது முறையாக நான் அமர்ந்தவுடன், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இட ஒதுக்கீடு குறித்து விரிவாகக் கடிதம் எழுதினேன். அந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று 10-4-2008 அன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நண்பர் அர்ஜுன் சிங் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த அளவிற்கு தொடர்ந்து பாடுபட்டு வந்த போராடி வந்த என்னைப் பார்த்து ஜெயலலிதா மத்திய அரசை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று கேட்டிருப்பது விந்தையான ஒன்றல்லவா?
ஜெயலலிதா எதை வேண்டுமானாலும் பேசட்டும், இட ஒதுக்கீடுப் பிரச்சினை எப்போதும் அவருக்குக் கைகொடுக்காது!
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications