கருணாநிதியின் வேன் பிரசாரங்கள் ரத்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இனி வேன் மூலம் பிரசாரம் செய்ய மாட்டார் என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. மாறாக, பொதுக் கூட்டங்களில் மட்டும் அவர் கலந்து கொண்டு பேசி வாக்கு சேகரிக்கவுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது வயதையும், உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் வேன் மூலமும், பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும் பிரசாரம் செய்து வருகிறார். மக்களை நேரில் சந்தித்து உருக்கமாகவும் பேசி வருகிறார்.
இதுவரை புதுச்சேரி, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் கருணாநிதி பிரசாரம் செய்துள்ளார். இந்த நிலையில் இன்று முதல் அவர் வேன் மூலம் பிரசாரம் செய்ய மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் பொதுக்கூட்டங்களில் மட்டும் அவர் கலந்து கொண்டு பேசுவார்.
திருத்தியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி மே 3ல் மதுரையிலும், 5ம் தேதி சென்னையிலும், 8ம் தேதி சென்னை தங்கச்சாலையிலும், 11ம் தேதி திருவாரூரிலும், 14ம் தேதி சென்னை சேப்பாக்கத்திலும் திமுக தலைவர் கருணாநிதி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார்.