திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களே, நேபாள நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளியுங்கள்: கருணாநிதி
சென்னை: தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை நேபாள மக்களின் துயர் துடைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்ததோடு, கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் தரைமட்டமாகி தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி துயர் துடைக்கும் பணியிலே இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் என்று அறிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் துயர் துடைப்பு நிதிக்காக ஒரு மாத கால ஊதியத்தை அளிக்க போவதாகவும் செய்தி வந்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் இந்த துயர் துடைப்பு நிதிக்கு உதவிட வேண்டுமென்ற அடிப்படையில், தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை நேபாள மக்களின் இந்த துயர் துடைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.