நவ.1-ல் கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் திருமணத்தில் பங்கேற்கிறார் கருணாநிதி!
கருணாநிதி கொள்ளுப் பேரன் மனுரஞ்சித் திருமணத்தில் பங்கேற்க உள்ளார்.
சென்னை: உடல்நலம் தேறிவரும் திமுக தலைவர் கருணாநிதி வரும் நவ.1-ந் தேதி கொள்ளுப் பேரன் மனுரஞ்சித் திருமணத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் ஓராண்டாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அண்மையில் உடல்நலம் தேறிய நிலையில் முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்திருந்தார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த முரசொலி பவளவிழா கண்காட்சி அரங்கை முழுமையாக கருணாநிதி பார்வையிட்டார். சுமார் 40 நிமிட நேரம் அங்கு பார்வையிட்ட பின் புன்னகையுடன் கை அசைத்தபடி வீட்டுக்கு திரும்பினார் கருணாநிதி.
இது திமுக தொண்டர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. இதைத் தொடர்ந்து நவம்பர் 7-ந் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கும் சுற்றுப் பயண நிகழ்ச்சியை கொடி அசைத்து கருணாநிதி தொடங்கி வைப்பார் என கூறப்பட்டது.
ஆனால் மழை காரணமாக ஸ்டாலின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 1-ந் தேதி கொள்ளுப் பேரன் மனுரஞ்சித் திருமண நிகழ்ச்சியில் கருணாநிதி கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் மகள் தேன்மொழியின் மகன் மனுரஞ்சித். இவருக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்சிதாவுக்கும் நவம்பர் 1-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமணத்தை கருணாநிதி நடத்தி வைக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.