மாநாட்டுக்கு மத்தியில் 'ரிலாக்ஸ்'... செல்வேந்திரன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த கருணாநிதி!
திருச்சி: திமுகவின் 10வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, மாநாட்டுக்கு மத்தியில், திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார்.
திருச்சி செல்வேந்திரன் மகன் திருமணத்தை அவர் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
கருணாநிதியின் பேச்சு...
கழகத்தின் 10 வது மாநில மாநாட்டையொட்டி, அதற்கு மகுடம் சூட்டுதைப் போல, என்னுடைய அருமைத் தம்பி செல்வேந்திரன் அவர்களுடைய இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழா நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்று நான் மிகுந்த பூரிப்போடு சொல்ல விரும்புகின்றேன்.
செல்வேந்திரன் அவர்கள் இந்த இயக்கத்தில் இன்று நேற்றல்ல, நம்முடைய கொள்கைகளில் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்ற திராவிட இயக்கப் பெரியோர்களின், நண்பர்களின், தோழர்களின், உற்றார் உறவினர்களின் பேரன்பைப் பெற்று தமிழகத்திலே பகுத்தறிவுப் பிரச்சாரத்திலே தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்.
அவருடைய இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த இனிய மண விழா நிகழ்ச்சியில் மணமக்கள், என்.செல்வேந்திரன் - செ.பாக்கியமணி ஆகியோரின் அருமைப் புதல்வர் செ.எழில் மாறனுக்கும், குணசேகரன்- லதா ஆகியோரின் அருமைப் புதல்வி செல்வி. அகிலா ஆகியோருக்கும் நடைபெற்றுள்ள இந்த வாழ்க்கை ஒப்பந்த விழாவில் நான் - மாநாட்டில் பல்லாயிரக் கணக்கில் குழுமியிருக்கின்ற, காத்திருக்கின்ற மக்கள் காத்திருக்கட்டும்; அதற்கிடையே திருமண விழாவிலே கலந்து கொள்வதும் அந்த மாநாட்டின் ஒரு பகுதிதான் என்ற வகையில் இந்த மணவிழாவில் கலந்து கொண்டிருக்கிறேன்.
ஏனென்றால், நேற்றைய தினம் நம்முடைய கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் மாநாட்டிலே குறிப்பிட்டதைப் போல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சமூகப் பணிதான் முதல் பணி என்றும், அதற்கடுத்துதான் அரசியல் பணி என்றும் அவர் குறிப்பிட்டதைப் போல, அதை ஏற்றுக் கொண்டுள்ள வகையில் இந்த நாள், இந்தத் திருமணம் சமுதாயத்திலே நாம் மேற்கொண்டு வருகின்ற சமுதாயப் புரட்சியின் ஒரு அங்கமாக இந்த வீட்டிலே இன்றைக்கு இந்த மணவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மணமக்களை என்றும் போல் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றாலும், திருமணம் பற்றியோ தமிழர்களுடைய மணவாழ்க்கை பற்றியோ பேசுவதற்கு நேரமில்லை என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.ஏனென்றால், லட்சோபலட்சம் மக்கள் மாநாட்டுப் பந்தலிலே திரண்டிருக்கிறார்கள்.
காத்திருக்கின்ற அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் இங்கேயும் மணமக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற விதத்தில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பினைப் பெற்றமைக்காக நான் மிகுந்த மனநிறைவு கொள்கின்றேன்.
"மணமக்கள் தமிழ்போல் தழைத்து வாழ்க!'' என்று எனது வாழ்த்துகளை மணமக்களுக்குக் கூறி, இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட்டத்தோடு கூட்டமாக, பல ஊர்களிலே இருந்து, பல்வேறு வாகன வசதிகளைச் செய்து கொண்டு வந்து சேர்ந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ்ப் பெருங்குடி மக்கள், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் - இவர்களுடைய வாழ்த்துக்களை எல்லாம் பெறுகின்ற வகையில் இந்த மணவிழாவை ஏற்பாடு செய்து, இதிலே நான் கலந்து கொள்ள வேண்டுமென்று தன்னுடைய தணியாத விருப்பத்தை நிறைவு செய்து கொண்ட தம்பி செல்வேந்திரன் அவர்களுக்கும் - செல்வேந்திரனுடைய குடும்பத்தாருக்கும், இந்தக் குடும்பத்திலே இன்றைக்குக் குதூகலமாக, மணமக்களாக வீற்றிருக்கின்ற எழில்மாறன், அகிலா ஆகியோருக்கும் என்னுடைய இதய வாழ்த்துக்களைத் தெரிவித்து வாழ்க! தமிழ் போல தழைத்து வாழ்க என்று கூறி விடைபெறுகிறேன் என்றார் கருணாநிதி.