பொங்கல்: கருணாநிதியிடம் ஆசி பெற்ற ஸ்டாலின், கனிமொழி: ரூ.10 'அள்ளிக்' கொடுத்து வாழ்த்து
சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். திமுக நிர்வாகிகளும், முக்கிய பிரமுகர்களும் சந்தித்து ஆசி பெற்றனர். அனைவருக்கும் தலா, 10 ரூபாய் வழங்கி வாழ்த்து கூறினார் கருணாநிதி.
பொங்கல் விழாவை ஒட்டி, சென்னை கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி., காலனியில் உள்ள கருணாநிதியின் வீடுகள், விழாக்கோலம் பூண்டிருந்தது. தொண்டர்களும், முக்கிய பிரமுகர்களும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துக்களை கூறினர்.

கோபாலபுரத்தில்
வண்ண விளக்குகளாலும், வாழை மரம் மற்றும் மாவிலை தோரணங்களாலும் கருணாநிதியின் வீடுகளும், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீடு, அண்ணா அறிவாலயம் போன்றவை அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

திரண்ட தொண்டர்கள்
கருணாநிதியை சந்திக்க, அவரின் கோபாலபுரம் வீட்டிற்கு காலையில் இருந்தே தொண்டர்கள் நிறைய அளவில் திரண்டனர்.

ஸ்டாலின் சந்திப்பு
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு கருணாநிதி ரூ.10 வழங்கி வாழ்த்து கூறினார்.

வைரமுத்து
கவிஞர் வைரமுத்து,குமரி ஆனந்தன், ராம.வீரப்பன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன், முன்னாள் எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தன்னை சந்தித்த கட்சி பிரமுகர்களின் வாழ்த்துக்களை ஏற்ற கருணாநிதி, அவர்களுக்கு, தலா, 10 ரூபாய் வழங்கினார்.

ராஜாத்தி, கனிமொழி
சி.ஐ.டி., காலனியில் உள்ள வீட்டிற்கு கருணாநிதி சென்றார். அங்கு, துணைவி ராஜாத்தி, மகள் கனிமொழி ஆகியோர் அவரிடம் ஆசி பெற்றனர். அப்போது, ராஜாத்திக்கும், மகள் கனிமொழிக்கும் கருணாநிதி, தலா 10 ரூபாய் வழங்கினார்.

நலத்திட்ட உதவி
சென்னை, கொளத்தூர் பகுதியில், தி.மு.க., சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அப்பகுதி மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

கனிமொழி பரிசு
இதேபோல், சென்னை, திருவல்லிக்கேணியில் நடந்த பொங்கல் விழாவில், கனிமொழி பங்கேற்று பொதுமக்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசுப் பைகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications