வாக்காளர்கள் சேர்ப்பில் விதிமீறும் ஆளும்கட்சியினர்: கருணாநிதி குற்றச்சாட்டு

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
"தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்காக, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் 1.10.2013 அன்று வெளியிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து முறைப்படி நீக்கவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட, ஒன்றிய, நகர, நகரிய, பேரூர் கிளைக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டு தலைமை கழகத்தின் சார்பில் அறிக்கை ஒன்று 4.10.2013 தேதிய முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பணியில் கழகத்தைச் சேர்ந்த சிலர் சுறுசுறுப்புக் காட்டவில்லை என்றும், அதே நேரத்தில் ஆளுங்கட்சியினரே வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல் நடைபெறும் பள்ளிகளில் அதிகாரிகளை முற்றுகையிடுவதைப் போலச் சூழ்ந்து கொண்டு மற்ற கட்சியினருக்கு இடம் தராத வகையில் தாங்கள் விரும்புகின்றவர்களை விதிமுறைகளுக்கு புறம்பாக புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதிலே முனைப்பு காட்டிக் கட்டாயப்படுத்தி வருவதாக எனக்கு செய்திகள் வந்துள்ளன.
எனவே கழக தோழர்கள், மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகரக்கழக, கிளைக்கழக நிர்வாகிகள் உடனடியாக எந்தவிதமான சுணக்கமும் இன்றி வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் நடவடிக்கைகளிலே சட்டத்திற்குட்பட்டு மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications