சென்னை மேயருக்கும், மக்களுக்கும் கருணாநிதி அளிக்கும் விளக்கம்!
சென்னை: அண்ணா அறிவாலய இடம் தொடர்பாக சென்னை மேயர் சைதை துரைசாமிக்கும், சென்னை நகர மக்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அந்த அறிக்கையில், தன் மீது எரிச்சல் கொண்டவர்களின் பாராட்டினைத் தொடர்ந்து பெறலாம் என்ற நம்பிக்கையில் மேயர் நடந்து கொள்வதும், பேசுவதும், அவர் வகித்துள்ள பதவிக்கு அழகல்ல என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கருணாநிதியின் விரிவான அறிக்கை...

மேயருக்கும், மக்களுக்கும் ஒரு விளக்கம்!
அறிவாலயத்திற்குள் இருக்கும் ஓ.எஸ்.ஆர். (திறந்தவெளி நிலம்) நிலம், இதுவரை தானப் பத்திரம் மூலம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. சூடு, சொரணை இருக்குமானால், நிலத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உங்கள் மேலிடத்தில் சொல்லுங்கள் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சாடியிருப்பதாக எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.

தரம் தாழ்ந்து பேசுவதா...
மாநகராட்சி மன்றத்தின் மேயரை நான் நீண்ட நாட்களாக அறிவேன். அவர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவரின் உரையைப் படித்துவிட்டு சென்னைவாழ் மக்கள் குழப்பத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, இந்த விளக்கத்தை நான் அளிப்பது தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை
அண்ணா அறிவாலயத்திற்குள் இருக்கும் இந்தத் திறந்த வெளி நிலம் பற்றி இதுவரை எத்தனை முறை பேசப்பட்டு, அதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதுபற்றி அ.தி.மு.க.வினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

ஒப்படைக்கவி்ல்லை என்றால் என்ன அர்த்தம்
மேயர் சைதை துரைசாமி பேசும்போது, அறிவாலயத்திற்குள் இருக்கும் ஓ.எஸ்.ஆர். நிலம், கடந்த ஆட்சியில், சிறப்புச் சலுகையாக தானப் பத்திரம் பதிவு செய்ய வேண்டாம் என்று அரசாணை வெளியிட்டு, மாநகராட்சியில் தனித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என்று அவரே தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அவரே குறிப்பிட்டு விட்டு, தானப்பத்திரம் மூலமாக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று பேசினால் என்ன அர்த்தம்?

நிபந்தனையோடு வரைபட அனுமதி
1988ஆம் ஆண்டு தி.மு.க. அறக்கட்டளையின் சார்பாக அண்ணா அறிவாலயக் கட்டிட வரைபட அனுமதியின்போது, சுமார் 10 சதவீத திறந்த வெளி ஒதுக்கீடு நிலத்தை தி.மு.க. அறக் கட்டளையே பராமரித்திட மனு செய்யப்பட்டது. அம்மனு தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த திறந்தவெளி ஒதுக்கீட்டு இடத்தை, அண்ணாப் பூங்காவாக பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு வரைபட அனுமதி அளிக்கப்பட்டு, அது தொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

காமராஜர் அரங்கத்திற்கும் விதி விலக்கு
தி.மு.க. அறக்கட்டளைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது போலவே, 1988ல் காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான காமராஜர் அரங்கத்திற்கு முன்னால் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு இடத்தை, அந்த அறக்கட்டளையே பராமரித்துக் கொள்ள அனுமதி அளித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது கூறியுள்ள குற்றச்சாட்டில் காங்கிரஸ் அறக்கட்டளையைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவாலயத்திற்கு சரித்திரம் உண்டு
அண்ணா அறிவாலயத்துக்கு என்று ஒரு சரித்திரம் உண்டு. அது, தி.மு. கழகத்தினுடைய அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டதாகும். அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு முறைப்படி அனுமதி கோரி ; 11-8-1980இல் அனுமதி கிடைத்த பிறகு கட்டிடம் கட்டத் தொடங்கிய போது, சிமெண்ட் பற்றாக்குறை, தண்ணீர்த் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்ற காரணங்களால் பணிகளை விரைவாக முடிக்க முடியாமல் சற்று சுணக்கம் ஏற்பட்டது. கட்டிடத்திற்குப் பக்கத்தில், அதற்குரிய பொருள்கள், கருவிகளை வைக்க சாதாரண "ஷெட்" ஒன்றும் கட்டத் தொடங்கினோம்.

அதிமுக ஆட்சியில் எச்சரித்த அதிகாரிகள்
அப்போது திடீரென்று 28.10.1985 அன்று அ.தி.மு.க. ஆட்சியில், எம்.எம்.டி.ஏ. அதிகாரிகள் சிலர் கட்டிடத்தை நேரில் பார்த்து விட்டு, 30.10.1985 அன்று, குறித்த காலத்திற்குள் பணிகளை ஏன் முடிக்கவில்லை என்றும், உடனடியாகப் பணிகளை நிறுத்த வேண்டுமென்றும் கடிதம் அனுப்பினார்கள். அதற்கு 2.11.1985 அன்று எழுதிய பதிலில், அனுமதியினைப் புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக வும், பக்கத்தில் உள்ள ஷெட் கட்டுவதற்கான அனுமதியையும் பெறுவதற்கு முயற்சிகள் எடுப்பதாகவும் தெரிவித்தோம்.

பணிகளைத் தொடர அனுமதி கேட்டோம்
இதற்கு 5.11.1985 அன்று எம்.எம்.டி.ஏ. எழுதிய பதில் கடிதத்தில், கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டதா என்பது பற்றி 12.11.1985ஆம் தேதிக்குள் பதில் கிடைக்கா விட்டால், எம்.எம்.டி.ஏ. கடும் நடவடிக்கை எடுக்கு மென்று தெரிவித்தார்கள். அதற்கு 7.11.1985 அன்று எழுதிய பதில் கடிதத்தில் கட்டிடப் பணிகளை நிறுத்திவிட்டதற்கு உறுதி அளிக்கிறோம் என்று எழுதினோம். அதே நாளில் எழுதிய மற்றொரு கடிதத்தில், அனுமதியைப் புதுப்பித்து, பணிகளைத் தொடர்ந்திட அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம்.

கோரிக்கையை மறுத்த அதிகாரிகள்
19.12.1985 தேதியன்று எம்.எம்.டி.ஏ. எழுதிய கடிதத்தில், கட்டிடத்திற்கு ஓரப் பகுதிகளில் போதுமான இடம் ஒதுக்கப்படவில்லை, பத்து சதவிகிதம் திறந்த வெளி ஒதுக்கப்படவில்லை என்ற காரணங்களைக் கூறி, எங்கள் கோரிக்கை மறுக்கப்படுவதாகத் தெரிவித்தது. அந்தக் கடிதத்தின் கீழே "குறிப்பு" என்று போட்டு, தேவைப்பட்டால் இரண்டு மாதத்திற்குள் அரசுக்கு மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தார்கள். உடனடியாக, அவர்கள் குறிப்பிட்டதைப் போல தவறுகள் களையப்படுவதாகவும், 6 மீட்டர் அளவிற்கு இடம் ஒதுக்கி விடுவதாகவும், கண் சிகிச்சை முகாமிற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை திறந்தவெளித் தேவைக்காக ஒதுக்குவதாகவும் தெரிவித்து பதில் எழுதினோம்.

உத்தரவுகளை அடுக்கிய எம்எம்டிஏ
7.1.1986 அன்று எம்.எம்.டி.ஏ. எழுதிய கடிதத்தில், கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட ஒரு "ஆர்க்கிடெக்ட்" நியமிக்கப்பட வேண்டும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணிகளின் முன்னேற்றம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும், மரம் நட வேண்டும், பணிகள் முற்றுப் பெற்றவுடன் தெரிவிக்க வேண்டும் என்றெல்லாம் கூறிவிட்டு, "திறந்த வெளித் தேவைக்காக ஒதுக்கப்படும் இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையாளர் பெயருக்கு "ரிஜிஸ்டர்டு கிப்ட் டீட்" மூலமாகப் பதிவு செய்து ஒப்படைப்பதோடு, பத்து நாட்களுக்குள் ரூ.50,200 கட்ட வேண்டும் என்றும், அதற்குப் பிறகுதான் கட்டிட அனுமதி வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

பிரச்சினை எழவில்லையே
9.1.1986 அன்று நாங்கள் எழுதிய கடிதத்தில், நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும், 50,200 ரூபாய்க்கான காசோலையை அனுப்புவதாகவும் தெரிவித்து விட்டு, "1980ஆம் ஆண்டு முதன் முதலில் இதற்கான அனுமதி குறித்து அரசாங்கத்திற்கு நாங்கள் விண்ணப்பித்துக் கொண்டபோது, எங்களுடைய அறக்கட்டளையின் நலத் திட்டங்களை மனதில் கொண்டு அரசு எங்களுக்கு அனுமதி வழங்கியது. அப்போது இந்தத் திறந்த வெளிஇடத்தினை ஒதுக்குவது பற்றிப் பிரச்சினையே எழவில்லை.

அறிஞர் அண்ணா பூங்கா
இப்போது எம்.எம்.டி.ஏ. தெரிவித்த கருத்துப்படி திறந்தவெளிக்கான இடத்தை பொதுமக்கள் உபயோகத்திற்காக "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் ஒதுக்குவதற்குத் தயாராக இருக்கிறோம். இருந்தாலும், அறக் கட்டளையின் முக்கிய நல்ல நோக்கங்களைக் கருதி, இந்தத் திறந்தவெளி இடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை அறக்கட்டளையே வைத்துக் கொள்ளவும் - பத்திரம் மூலமாக மாநகராட்சிக்கு தானம் செய்து தர வேண்டுமென்ற நிபந்தனையை வலியுறுத்தாமல் விரைவில் அனுமதியினை வழங்கவும் வேண்டும்"" என்று கேட்டுக் கொண்டோம்.

அரசுக்கும் கடிதம் எழுதினோம்
எம்.எம்.டி.ஏ.விற்கு இவ்வாறு எழுதியதோடு, 10.1.1986 அன்று அனைத்து விவரங்களையும் அரசாங்கத்திற்கும் எழுதி, விரைவில் கட்டிடப் பணிகளைத் தொடர அனுமதியளிக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டோம். கடிதம் எழுதியதோடு கழகத்தின் சார்பில் அன்பில் தர்மலிங்கம் அவர்களையும், டி.ஆர். பாலு அவர்களையும் வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சரிடம் அனுப்பிய போது, விரைவில் முடிவு செய்வதாகக் கூறினார்.

எம்.ஜி.ஆருக்கும் கடிதம்
அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் மாணிக்கம், முதல் அமைச்சருக்கே இது பற்றி கடிதம் எழுதுமாறு கூறியதற்கேற்ப, 5.3.1986 அன்று முதல்வராக இருந்த நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதினேன். அதற்கு எம்.ஜி.ஆர். உடனடியாக எழுதிய பதிலில், என் கடிதத்தில் குறிப்பிட்ட வேண்டுகோளை கனிவுடன் பரிசீலனை செய்து ஆவன செய்கிறேன் என்று தெரிவித்திருந்தார். மீண்டும் 19.3.1986 அன்றும், 22.3.1986 அன்றும் முதலமைச்சருக்கு நினைவூட்டல் கடிதங்கள் எழுதினேன். மேலவையிலும் பேசினேன். எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

தெளிவான அரசாணை
அதற்குப் பிறகு ஆளுநர் ஆட்சியில், 5.8.1988 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில்தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது இந்த இடத்திற்கான விதிவிலக்கு ஆளுநர் ஆட்சியிலேயே அரசாணை மூலமாகவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 7.9.1988 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு கெஜட்டிலும் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதற்குப் பின்னரும் 2004ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், அறக்கட்டளைக்கு அரசு அனுப்பிய கடிதத்தில், திறந்தவெளி இடம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருப்பதாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கோரியிருந்தது. 4.7.2004 அன்று அரசுக்கு அறக்கட்டளை சார்பில் விளக்கமாகப் பதில் எழுதப்பட்டது. அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி தி.மு.க. அறக்கட்டளையின் ஆட்சேபணை மனுவைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டார்.

எந்த விதி மீறலும் இல்லை
அதற்கு 7.12.2007 அன்று அரசின் சார்பில் வந்த பதிலில் ; எம்.எம்.டி.ஏ. யின் தலைமை திட்ட அலுவலரும், சென்னை மாநகராட்சி சார்பில் தலைமைப் பொறியாளரும் 2.11.2007 அன்று திறந்தவெளிப் பூங்காவினை நேரில் பார்வையிட்டு, அந்த இடம் முறைப்படியும், விதிப்படியும் பூங்காவாகப் பராமரிக்கப்படுவதாகவும், இதில் எந்தவிதமான விதி மீறல்களும் இல்லை என்றும் தெரிவித்ததின் அடிப்படையில், அரசு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை முடித்துக் கொள்வதாகவும், அந்தக் கடிதத்தின் மேல் நடவடிக்கையை விட்டு விடுவதாகவும், அந்த இடத்தில் எவ்விதமான கட்டுமானப் பணியும் மேற்கொள்ளாமல், திறந்தவெளி இடமாகவே பராமரிக்க வேண்டுமென்றும் தெரிவித்து 7.12.2007 அன்று தெளிவாகக் கடிதம் எழுதியிருக்கின்றது.

அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டு
இவை அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்கள், அரசாணைகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு மாநகராட்சியின் மேயராக இருப்பவர் இந்த அளவிற்குப் பேசுவது எந்த நியாயத்தின்பாற்பட்டது? இவ்வாறெல்லாம் பேசுவதை இனியாவது அவர் நிறுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறதே
சென்னை மாநகராட்சியில் எவ்வளவோ பிரச்சினைகள் அடுக்கடுக்காக ஏடுகளில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. முன்னாள் மேயர் தம்பி மா. சுப்பிரமணியன் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், சென்னை மாநகராட்சியின் இலட்சணம், சென்னைத் தெருக்களைப் பார்த்தாலே தெரிகிறது என்றும், கழக ஆட்சியில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒன்பது மேம்பாலங்களைக் கட்டியது குறித்தும், மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரம் கழகம் பொறுப்பிலே இருந்த போது 50 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதமாக உயர்ந்தது குறித்தும், புதிய பூங்காக்களை உருவாக்கியது குறித்தும், மாநகராட்சிக்குச் சொந்தமான 4 ஆயிரம் கோடி சொத்துகளை மீட்டது குறித்தும், மாநகராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களில் பூங்காக்களை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட்டது குறித்தும், ஆனால் தற்போது மாநகராட்சிக்குச் சேர வேண்டிய ஓ.எஸ்.ஆர். நிலங்களைத் திரும்பவும் அந்த நிறுவனங்களுக்கே தரப்படுகிறதே ஏன் என்பது குறித்தும்,

குப்பைக் காசில்
தி.மு. கழக ஆட்சியில் ஒரு டன் குப்பை எடுக்க 642 ரூபாய் கொடுக்கப்பட்டது, இப்போது ஐதராபாத் நிறுவனத்துக்கு ஒரு டன் குப்பை எடுக்க 1,542 ரூபாய் கொடுக்கப்படுகிறது, இடைப்பட்ட பணம் எங்கே என்பது குறித்தும் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டிருந்தாரே, இதற்கெல்லாம் மேயர் பதில் சொல்லியிருந்தால் நான் மகிழ்ச்சியடைந்து இருப்பேன்.

பதவிக்கு அழகல்ல
ஆனால் அதற்குப் பதில் சொல்லாமல் என் மீது ஏற்கனவே எரிச்சல் கொண்டவர்களின் பாராட்டினைத் தொடர்ந்து பெறலாம் என்ற நம்பிக்கையில் மேயர் நடந்து கொள்வதும், பேசுவதும் அவர் ஏற்றுள்ள பதவிக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications