என்னை புன்னகையோடு வரவேற்ற திருச்சி சிவாவின் மனைவி இன்று இல்லையே: கருணாநிதி இரங்கல்
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இல்லத்தில் நடைபெற்ற மணவிழாவிற்கு நான் சென்றபோது புன்னகையோடு என்னை வரவேற்று மகிழ்ந்தவர் இன்று நம்மிடையே இல்லை என்று திருச்சி சிவாவின் மனைவி மரணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் துணைவியார் தேவிகா ராணி நேற்று நள்ளிரவு மறைந்த செய்தியினை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். கடந்த சில மாதங்களாக நோயினால் தாக்குண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், கடந்த வாரம் மருத்துவர்களும் கைவிட்டு, வீட்டிற்கு அழைத்துச் செல்ல பணித்தபோது என்னிடம் கண்ணீர் ததும்ப வந்து அந்த செய்தியினை தெரிவித்தார். மேலும் ஒரு சில மாதங்களாவது அவர் உடல் நலத்தோடு இருப்பார் என்று எண்ணியதற்கு மாறாக அவர் மறைந்து விட்ட செய்திதான் கிடைத்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இல்லத்தில் நடைபெற்ற மணவிழாவிற்கு நான் சென்றபோது புன்னகையோடு என்னை வரவேற்று மகிழ்ந்தவர் இன்று நம்மிடையே இல்லை. அவரை இழந்துவாடும் சிவாவிற்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.