பிப்ரவரி 3ம் தேதி அமைதிப் பேரணி.. கருணாநிதி தலைமையில்
இதுகுறித்து தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை...
காஞ்சி தந்த காவியத் தலைவர் - உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் - தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர்-
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் - "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் - சுயமரியாதை சுடரொளி - சொக்க வைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்து வேந்தர் - தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் - பேரறிஞர் அண்ணா அவர்களின் 45வது நினைவு நாளினை யொட்டி தலைவர் கலைஞர் தலைமையில், பொதுச்செயலாளர் பேராசிரியர், பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி - 3, திங்கள் அன்று காலை 7.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள டி-1, திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.
கழக மத்திய அமைச்சர் பெருமக்கள், மாநில முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, இலக்கிய அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி ஆகிய அனைத்து அணியினரும் அண்ணன் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என வடசென்னை, தென் சென்னை மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.