கூட்டணி என்று வரும் போது காங்கிரஸ் கட்சிக்கு இடம் உண்டு - கருணாநிதி பேட்டி
சென்னை: காங்கிரஸ் கட்சியை திமுக விலக்கி வைக்கவில்லை கூட்டணி என்று வரும் போது காங்கிரஸ் கட்சிக்கு இடம் உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி திட்டமிடலில் எல்லா கட்சிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆளும் அதிமுக கூட்டணி விவகாரத்தில் அமைதி காத்து வருகிறது.

மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியாக உருவெடுத்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. தேமுதிகவும், தமாகா கட்சியும் தங்களது கூட்டணியில் இடம் பெறும் என்ற நம்பிக்கையில் இவர்கள் உள்ளனர்.
பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டு அந்த கட்சியும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. தமிழகத்தில் முக்கிய பிரதான கட்சியான திமுக தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக, திமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று அக்கட்சி தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழகத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் தயார். அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடும் பட்சத்தில் அக்கூட்டணியில் சேர காங்கிரஸ் தயாராக உள்ளதாக கூறினார்.
இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:
செய்தியாளர்: மூன்றாண்டுகள் தொடர்ந்து ஒரே பதவியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று தமிழகத் தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியிருக்கிறார். தேர்தல் எப்படி நடத்த வேண்டுமென்று
நீங்கள் விரும்புகிறீர்கள்?
கருணாநிதி: ஜனநாயகம் இம்மியளவும் பழுதுபடாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டவட்டமான கருத்து. அதைத்தான் இப்போதும் வலியுறுத்துகிறேன்.
செய்தியாளர்: ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாகச் செய்தி வரவில்லையே?
கருணாநிதி: அதற்கான அறிவிப்புகள் மத்திய அரசின் அமைச்சர்கள் மூலமாகவே வெளி வந்து கொண்டிருக்கின்றன. மிக விரைவில் அதற்கான முறையான அறிவிப்பு மத்திய அரசின் அமைச்சர் மூலமாகவே வெளியிடப்படும்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
செய்தியாளர்: தி.மு.க. தேர்தல் அறிக்கை வேறு எந்தக் கட்சியும் இல்லாத அளவுக்கு குழு அமைத்து முறையாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தக் குழு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களுக்கும் சென்று மக்களின்
அபிப்பிராயங்களைத் தெரிந்து வந்திருக்கிறார்கள். தேர்தல் அறிக்கை பற்றி?
கருணாநிதி: தமிழ்நாட்டில் தொழில் வளர்ந்திடவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதிலும், எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழ்நாட்டிலே உள்ள ஏழையெளிய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் வகையிலும், வணிகப் பெருமக்களுக்கும், மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் உதவிடும் வகையிலும் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டு வருகிறது.
செய்தியாளர்: தே.மு.தி.க. வுக்கு கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தீர்கள். அதைப் போலவே காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுவீர்களா?
கருணாநிதி: கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடும் போது காங்கிரசை நாங்கள் விலக்கி விட மாட்டோம்.
செய்தியாளர்: நான்கரை ஆண்டுகளாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. பல இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் ஜெயலலிதா சந்திக்க வில்லையே?
கருணாநிதி: உங்களுடைய கேள்வியே இதற்குப் பதில்!
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications