பியுஸ் கோயல் புகாருக்கு என்ன சொல்லப் போகிறார் ஜெ?... கருணாநிதி கேள்வி
சென்னை: மத்திய அரசின் மின்துறை அமைச்சரே, தனக்கு தமிழக முதல்வரையோ அல்லது அமைச்சரையோ சந்தித்து விவாதிக்க வாய்ப்பு இல்லை என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் புகார் தெரிவித்திருப்பது குறித்து அதிமுக அரசின் பதில் என்ன என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் இந்திய வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு, ‘இந்தியாவை பொருளாதார வல்லரசாக ஆக்குவோம்' என்ற தலைப்பில் பேசினார் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல்.
அப்போது அவர், ‘இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருந்த போதும், மற்ற மாநில முதல்வர்களை எளிதால் சந்திக்க முடிந்தது. ஆனால் தமிழக முதல்வரை ஒருமுறை கூட சந்திக்க இயலவில்லை' என பரபரப்பு புகாரைத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக அதிமுக அரசின் பதில் என்ன என்பதை உடனடியாக தமிழக முதல்வர் அளிப்பார் என எதிர்பார்ப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமைச்சரின் புகார்...
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வரையோ, துறைகளின் அமைச்சர்களையோ சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது. மத்திய மின்சாரத் துறை அமைச்சர், பியுஷ் கோயல் நேற்றையதினம் டெல்லியில் பேசும்போது, "நான் பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய மின் திட்டங்கள் தொடர்பாக அங்குள்ள முதல்வர்களுடன், மற்ற அமைச்சர்களுடன் பேசி வருகிறேன்.

தமிழக முதல்வர்...
கடந்த 18 மாதங்களில் இப்படி 28 மாநிலத்தின் மின்துறை அமைச்சர்களை மட்டுமல்ல, முதல்வர்களுடன் கூட சந்தித்துப் பேச முடிந்தது. இதில் 29-வது மாநிலம் தமிழ்நாடு; தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம் தான். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை என்னால் இது வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒருமுறை மின்துறை அமைச்சரிடம் பேசினேன்.

அறிக்கை தேவை...
அதற்கு அவர், "நான் அம்மாவிடம் பேசுகிறேன்" என்றார். ஆனால் அதன்பின் பல மாதங்கள் பதில் வரவில்லை. நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சி எம்.பி.க்கள் தாங்களாகவே ஒருவரும் வாய் திறப்பதே இல்லை. அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால், அதற்கு சென்னையில் இருந்து அறிக்கை தயாரித்து வர வேண்டும்.

வாய்ப்பு கிடைக்கவில்லை...
கடந்த 18 முதல் 22 மாதங்களில் தமிழக முதல்வருடனும் பேச முயற்சி செய்தேன். என்னால், ஒரே ஒரு முறை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. அடுத்த முறை சென்னையில் சந்திக்க உறுதி அளித்தார். ஆனால், இதுவரை எனக்கு அவரிடமிருந்து வாய்ப்பு கிடைக்கவே இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலொழிய மின் துறையைப் பொறுத்தவரை அந்த மாநிலத்திற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது என்று பேசி, ஊடகங்களில் எல்லாம் பரபரப்பாக அந்தச் செய்தி வந்துள்ளது.

நல்ல உதாரணம்...
அ.தி.மு.க. அரசு, மத்திய அரசோடு எந்த அளவுக்குத் தொடர்பு வைத்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. தமிழகத்திலே உள்ள பல்வேறு பிரச்சனைகள் பற்றி அ.தி.மு.க. அரசின் சார்பில் அவ்வப்போது மத்திய அரசின் அமைச்சர்களோடு தொடர்பு கொண்டு பேசினால் தானே தமிழகத்திற்குத் தேவையானவற்றைச் செய்திட இயலும்.

தமிழகத் தேவைகள்...
தமிழக முதல்வர் வேண்டுமானால், "பிரதமரோ, மத்திய நிதி அமைச்சரோ என் வீட்டிற்கு என்னைத் தேடி வந்து சந்தித்து விட்டுப்போகட்டும்" என்ற அளவிலே இருந்தால் தமிழ்நாட்டின் தேவைகள் எவ்வாறு நிறைவேறும்?

ஜெ.வைப் பார்க்க முடிவதில்லை...
பத்திரிகையாளர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க முடிவதில்லை. மத்திய அமைச்சர்களும் அவரை பார்த்துப் பேச முடியவில்லை. வாக்களித்த பொது மக்களும், தங்கள் குறைகளை முதல்வரிடம் நேரில் சொல்ல வாய்ப்பளிப்பதில்லை. ஏன்; மூத்த அதிகாரிகளே கூட முதல்வரை நேரில் கண்டு நிர்வாகப் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு நேரம் குறிப்பதில்லை.

திரைமறைவில் வாழ்க்கை...
அது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. அமைச்சர்களோ, சட்டசபை உறுப்பினர்களோ கூட, தேவை எழும் போது சகஜமாக முதல்வரைச் சந்திப்பதற்கான சூழ்நிலை இங்கே இல்லை. இப்படி முதல்வர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டிருந்தால், நிர்வாகச் சக்கரம் எப்படி மக்களுக்குப் பயன்தரும் வகையில் சுழலும்? மாநிலத்தில் ஜனநாயகம் எப்படி உயிர்ப்போடு உலவிட முடியும்?

பதில் என்ன?
மத்திய அரசின் மின்துறை அமைச்சரே, தனக்கு முதல்வரையோ அல்லது அமைச்சரையோ சந்தித்து விவாதிக்க வாய்ப்பு இல்லை என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசு பற்றி பேசியிருக்கிறார் என்கிற போது, இதற்கு அ.தி.மு.க. அரசின் பதில் என்ன என்பதை உடனடியாக தமிழக முதல்வர் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications