கருணாநிதி 92…. பிறந்தநாளுக்கு தயாராகும் பிரம்மாண்ட மேடை!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்ட மேடை தயாராகி வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதிக்காக வண்ணமயமான மேடை விறுவிறுப்பாக தயாராகிவருகிறது.
ஜூன் 3-ம் தேதி தனது 92-வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், 7.15 மணிக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
காலை 9 மணி முதல் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம், கருத்தரங்கம், உதவிப்பொருள்கள் வழங்கும் விழா, விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பிறந்தநாள் தினத்தன்று மாலை 6 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங் கேற்கிறார். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மிகப்பெரிய திட்டத்தை கருணாநிதி வைத்துள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.