உருவாகிறது கூட்டணி: விஜயகாந்துடன் கருணாநிதி தூதர் ஜெ. அன்பழகன் திடீர் சந்திப்பு!!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் தீவிர ஆதரவாளரான ஜெ. அன்பழகன் திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலின் போது திமுக- தேமுதிக கூட்டணி ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டதால் அக்கூட்டணி அமையவில்லை.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான மத்திய அரசில் அமைச்சர் பதவி, ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று தேமுதிக எதிர்பார்த்தது. ஆனால் எதுவும் கிடைக்காத விரக்தியில் தேமுதிக இருக்கிறது.

பாஜக கூட்டு வாழ்த்து
ஆனாலும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதாவோ, தேமுதிக தங்கள் அணியில் இருப்பதாகவே காட்டிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தின் பிறந்த நாளுக்காக பாஜக தலைவர்கள் கூட்டமாக சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதி வாழ்த்து?
அப்போதே திமுக தலைவர் கருணாநிதியும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்த வாழ்த்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஜெ. அன்பழகன் சந்திப்பு
இந்த நிலையில் திடீரென கருணாநிதியின் தீவிர ஆதரவாளரான தென் சென்னை மாவட்ட திமுக செயலர் ஜெ. அன்பழகன், விஜயகாந்தை நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இல்ல திருமண அழைப்பிதழ்
இந்த சந்திப்பு குறித்து தேமுதிக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தமது இல்லத் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜெ. அன்பழகன் விஜயகாந்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி உத்தரவு?
இருப்பினும் கருணாநிதியின் உத்தரவுப்படியே விஜயகாந்தை ஜெ. அன்பழகன் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தாக வேண்டிய நிலை இருப்பது குறித்தும் கணிசமான விட்டுக் கொடுப்புக்கும் திமுக தயாராக இருக்கிறது என்பதையும் விஜயகாந்திடம் சுட்டிக்காட்டுமாறும் ஜெ.அன்பழகனிடம் கருணாநிதி கூறியதாக தெரிகிறது.

கேப்டன் ஓகே
கருணாநிதியின் கருத்தை விஜயகாந்திடம் அன்பழகனும் தெரிவித்திருக்கிறார். இதை விஜயகாந்தும் ஆமோதித்ததாகவும் கூட்டணிக்கு முதல் அச்சாரமாக அன்பழகன் இல்ல திருமணத்தில் அவசியம் கலந்து கொள்வேன் என்றும் விஜயகாந்த் உறுதியளித்திருக்கிறாராம்.

கருணாநிதி கங்கணம்
திமுகவில் ஸ்டாலின் ஆதிக்கம் ஓங்கி இருந்த நிலையில் அழகிரி கலகக் குரல் எழுப்பி குட்டையைக் குழப்பினார். பின்னர் கடிவாளத்தை தற்போது கையில் எடுத்திருக்கும் கருணாநிதி, குழப்பம் எதுவும் இல்லமல் லாவகமாக தேமுதிகவை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் என்பதையே விஜயகாந்த்- அன்பழகன் சந்திப்பு உறுதிப்படுத்துகிறது என்கின்றனர் மூத்த திமுக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications