உறவுக்கு ‘கை’ கொடுப்போம்... காங்கிரசுடன் கூட்டணி சேர கருணாநிதியின் ‘கவிதை விடு தூது’?
சென்னை: முன்னாள் பிரதமர் நேருவின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, 44 ஆண்டுகளுக்கு முந்தைய தனது கவிதையை வெளியிட்டிருப்பதன் மூலம், காங்கிரசுடன் கூட்டணி சேர திமுக தலைவர் கருணாநிதி முயற்சிப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளியன்று முன்னாள் பிரதமர் நேருவின் 125வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. இந்நிலையில், நேற்று திமுக நாளேடான முரசொலி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், ‘நேரு கண்ட ஜனநாயகம்' என்ற தலைப்பில், 1970 நவ., 14ம் தேதி நடந்த, கவியரங்கத்துக்கு தலைமை வகித்து, கருணாநிதி கவிதை பாடினார். இந்த கவியரங்கில், கவிஞர்கள் எஸ்.டி.சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, முருகுசுந்தரம், அப்துல் ரகுமான், கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கவியரங்கில், 44 ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி பாடிய கவிதையை, நேருவின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடுகிறோம்' எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதோடு, கருணாநிதி பாடிய கவிதையும் அந்த அறிக்கையில் இணைக்கப் பட்டிருந்தது. அந்த கவிதையின் முடிவில், 'நல்லுரிமை பேணிக் காக்க, உறவுக்குக் கை கொடுப்போம், நம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் பிளவு பட்டுக் கிடக்கிறது. அதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பதவியேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீபத்தில் கருணாநிதியைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பு, காங்கிரஸ் மேலிட அறிவுரைப்படி நடந்தது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கருணாநிதியின் இந்தக் கவிதை வெளியாகியுள்ளது.
இதன்மூலம், மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைவதற்கான முயற்சிகள் நடப்பதாக அரசியல் பார்வையாளர்கள் hகருத்துத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications