திருவாரூர் தொகுதியில் கருணாநிதி... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
திருவாரூர்: சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த திருவாரூர் தொகுதி வாக்காளர்களுக்கு திமுக தலைவரும் தொகுதி எம்.எல்ஏவுமான மு.கருணாநிதி இன்று நன்றி தெரிவிக்கிறார். இதற்காக திருவாரூர் சென்றுள்ள அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் 2ஆவது முறையாகப் போட்டியிட்டு 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தனது 93ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை திருவாரூருக்கு வருகை தந்தார்
ரயில் நிலையத்தில் திமுக தொண்டர்கள் கருணாநிதிக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் சன்னதி தெருவில் உள்ள சகோதரியின் வீட்டில் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
காலை 10 மணிக்கு திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில், தி.மு.க. மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டர்.
நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்
மாலை 4 மணிக்கு, தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் ‘திண்டுக்கல்' ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
கலைஞர் விஞ்சிய புகழ்ச்சிக்கு காரணம் கலைப் பணியா, அரசியல் பணியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. கலைப்பணியே தலைப்பில் மதுரை சங்கர், கோவை தனபால், அரசியல் பணியே தலைப்பில் காரைக்குடி விக்னேஷ், கடலூர் தணிகைவேல் ஆகியோர் பேசுகின்றனர்.
மாலை 6 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது அவர், சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
நாளை 6ம் தேதி திருவாரூரில் இருந்து புறப்பட்டு, நாளை மறுநாள் (7ம் தேதி) சென்னை திரும்புகிறார்.