பன்றிக் காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி - கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய அளவில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், அதுவரை 743 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் 4,185 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 206 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 180 பேர், மத்தியப் பிரதேசத்தில் 99 பேர், தெலங்கானாவில் 46 பேர் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 225 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது. பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு தனியார் ஆய்வுக் கூடங்களில் ரூ. 3,750 கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் செய்தி வந்துள்ளது.
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்ளலாம். இது ஓராண்டுக்கு நோயைத் தடுக்கும். ஆண்டுதோறும் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களுக்கு பன்றிக் காய்ச்சலே வராது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசியை இலவசமாக வழங்க தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடெங்கும் உள்ள சிபிஐ அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தியைப் பின்பற்றுமாறு அதன் தலைமையக நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது உண்மையானால் மத்திய அரசும், பிரதமரும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐயில் ஹிந்திக்கு முதலிடம் அளிக்கப்பட்டால் மத்திய அரசின் ஒவ்வொரு துறையும் இதைப் பின்பற்றும் நிலை ஏற்படும்.
-இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
(தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?)