கருணாநிதி பூரண குணமடைந்தார்.. திங்கள்கிழமை அறிவாலயம் வருகிறார்!
ஒவ்வாமையிலிருந்து பூரண குணமடைந்துள்ள திமுக தலைவர் கருணாநிதி நவம்பர் 14ம் தேதி அண்ணா அறிவாலயம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து விட்டதாகவும் வருகிற திங்கள்கிழமை அவர் அண்ணா அறிவாலயம் வரவுள்ளதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக அவர் வழக்கமான பணிகளில் ஈடுபடவில்லை. அறிவாலயம் வரவில்லை. 4 தொகுதி வேட்பாளர் தேர்விலும் பங்கேற்கவில்லை. பிரசாரத்திற்கும் அவர் வர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கருணாநிதி பூரண குணமடைந்து விட்டதாக திமுர தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தல் குறித்து கருணாநிதி ஆலோசித்துள்ளாராம். தற்போது அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருவதாகவும், வருகிற திங்கள்கிழமை அவர் அறிவாலயம் வருவார் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கட்சி அலுவலகத்திற்கு வரவுள்ளதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.