'அமராவதி' நிச்சயம் சாதனை படைக்கும்... சந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி, நிச்சயம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, தெலுங்கானாவுக்கும், ஆந்திராவுக்கும், அடுத்த 10 வருடங்களுக்கு பொது தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அமராவதி நகருக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்ளும்படி, திமுக தலைவர் கருணாநிதிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.
இதற்கு பதலளித்து சந்திரபாபு நாயுடுவுக்கு, கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தாங்கள் முதலமைச்சர் ஆகி இருக்கும் புதிய ஆந்திர பிரதேச மாநிலத்தின் மக்கள் தலைநகராகும் அமராவதி நகரின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தாங்கள் அனுப்பிய அழைப்பிதழ் கிடைக்க பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அது தங்களின் கனவு நகரமாக உருவாக உள்ளது.
உங்களின் கனவுகள் மிகவும் சிறப்புமிக்க திறன் கொண்டவை. அமராவதி நகரம் நிச்சயம் மிகப்பெரிய சாதனை படைக்கும். அனைத்து தகுதி உடைய இந்நகரத்தை பிரதமர் நரேந்திரமோடி 22-ந் தேதி அடிக்கல் நாட்ட இருப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த விழா வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் ஆந்திர பிரதேச மக்கள் வாழ்வில் மேன்மேலும் முன்னேற்றம் அடைவார்கள்' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications