மனிதம் சாகவில்லை... இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக கொடுத்த கரூர் சிறுமி!
கரூர்: இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு நிவாரணமாக அளித்தார் கரூரை சேர்ந்த சிறுமி.
கேரளம் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள 14 மாவட்டங்களும் நீரால் மூழ்கின. மக்கள் ஆளடி உயரத்துக்கு மேலான வெள்ள நீரில் தத்தளித்தனர்.
இந்த மாநிலம் மீண்டும் புத்துயிர் பெற கேரள மாநில முதல்வர் நிதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி மற்ற மாநில அரசுகளும் சினிமா துறை மற்றும் தன்னார்வல அமைப்பினர் தாராளமாக நிதியையும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

7ஆம் வகுப்பு
இந்த நிலையில் கரூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கரூர் மாவட்டம் குமரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு அட்சயா (12) என்ற மகள் உள்ளார். அங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆபரேஷன்
அட்சயா பிறக்கும் போதே இதய கோளாறுடன் பிறந்தார். ஏழை தொழிலாளிகளான சுப்பிரமணி- ஜோதிமணிக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய பணமில்லை. இதனால் கடந்த ஆண்டு அட்சயாவின் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்தால்தான் பிழைக்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மற்றொரு ஆபரேஷன்
இதனால் பணத்துக்கு அல்லாடிய இவர்களின் நிலை இணைந்த கைகள் என்ற அமைப்புக்கு தெரியவந்தது. இதையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் அந்த சிறுமிக்காக நிதி திரட்டி ஆபரேஷனும் சென்னையில் நல்ல படியாக நடந்தது. இந்நிலையில் மறுபடியும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

கேரளா வெள்ளம்
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆபரேஷனுக்கு இரண்டரை லட்சம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து இணைந்த கைகள் அமைப்பினர் நிதிதிரட்டியதில் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. இதனிடையே அந்த சிறுமி கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை டிவியில் பார்த்து வேதனையடைந்துள்ளார்.

மக்கள் பாதை
தன்னால் முயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று தாய்- தந்தையரை நச்சரித்து வந்துள்ளார் அட்சயா. இதையடுத்து தனக்கு ஆபரேஷனுக்காக சேகரிக்கப்பட்ட ரூ. 20 ஆயிரத்தில் ரூ. 5 ஆயிரத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இந்த தொகை சகாயம் ஐஏஎஸ்ஸை முன்மாதிரியாக கொண்டு இயங்கும் "மக்கள் பாதை" எனும் அமைப்பின் சார்பில் கேரளாவுக்கு அனுப்பப்படவுள்ளது.

இதயம் இல்லாத மக்கள்
பணம் இருந்தாலும் இதயம் இல்லாத சில மக்களுக்கு மத்தியில் இதய கோளாறுக்காக ஆபரேஷன் செய்ய வைத்திருந்த பணத்தில் ஒரு தொகையை நிவாரணமாக கொடுத்த அட்சயாவின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். விழுப்புரத்தில் சைக்கிள் வாங்க சேகரித்த பணத்தை நிவாரணத்துக்கு அனுப்பினார் அனுப்பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications