தீக்குளித்து ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கட்டிப்பிடிப்பேன்.. அதிமுக எம்.எல்.ஏவின் அதிரடி எச்சரிக்கை
கரூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் இனியும் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எனக்கு நானே தீயிட்டு யார் சொன்னார்களோ அவர்களை கட்டிப்பிடித்து எனது எதிர்ப்பை காண்பிப்பேன் என்று ஜெயலலிதா பேரவையின் கரூர் மாவட்ட செயலாளரும், கரூர் மாவட்ட அதிமுக எம்.எல்.ஏவுமான எஸ்.காமராஜ் எச்சரித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து தமிழகம் முழுவதும். அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் மட்டுமல்லாமல் பிரதமர் மோடியை இழிவுபடுத்தி விட்டதாக கூறி பாஜகவினரும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம்
இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கிருஷ்ணராயபுரம் சட்டசபை உறுப்பினா் காமராஜ் தலைமையில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு இளங்கோவனை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

பாடையில் உருவபொம்மையை தூக்கி வந்து
பின்னர் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவபொம்மையை பாடை கட்டி நடுரோட்டில் வைத்து தீ வைத்து கொளுத்தினா். பின்னர் துடைப்பக் கட்டையால் அடித்தனர்.

ஏகப்பட்ட பேர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான வடிவேல், மாவட்ட கவுன்சிலா் கண்ணதாசன், அண்ணா தொழிற்சங்கம் பொரணி கணேசன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியகுழுத்தலைவா் முத்துசாமி, கிருஷ்ணராயபுரம் நகர கழக செயலாளா் தங்கதுரை, இளைஞரணி நிர்வாகிகள் யுவராஜ், பிரபாகா், அம்மா பேரவை ஒன்றிய செயலாளா் வீரமணி, கூட்டுறவு சங்க தலைவா் செல்வமணி, தொகுதி இணை செயலாளா் வமு மதியழகன், பேரூர் கழக நிர்வாகிகள் வெங்கடாசலம், பால்ராஜ், கவுன்சிலா் தா்மன் உள்ளிட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள், கட்சி தொண்டா்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

காமராஜ் விடுத்த எச்சரிக்கை
இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் செய்திருந்தார். அவர் போராட்டத்தின்போது கூறுகையில், தமிழக நிரந்தர முதல்வரும், அ.தி.மு.க வின் நிரந்தர பொதுச்செயலாளருமான அம்மாவைப் பற்றி யார் தவறாக பேசினாலும் இனி உருவ பொம்மை கிடையாது, நானே என்னை கொளுத்திக் கொண்டு சொன்னவர்களைக் கட்டி பிடித்து கொள்வேன். இது போல் நடந்தால் தான் அவர்களுக்குப் புத்தி வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications