நள்ளிரவில் லிங்கா பார்க்க அலைமோதிய ரசிகர்கள்... நொறுங்கிய காசி தியேட்டர் கண்ணாடிகள்
சென்னை: வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடக்கவிருந்த லிங்கா சிறப்புக் காட்சியைக் காண பெரும் ரசிகர் கூட்டம் திரண்டதால், காசி தியேட்டரின் கண்ணாடிகள் நொறுங்கின.
இதனால் 1 மணி நேரம் தாமதமாகக் காட்சி ஆரம்பமானது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இன்று உலகம் எங்கும் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சி உலக அளவில் பிரபலமானது. படம் வெளியாக பத்து மணி நேரம் இருப்பதற்கு முன்பே இந்தக் காட்சி ரசிகர்களுக்கென திரையிடப்படும்.
இந்தக் காட்சியைக் காண தாரை தப்பட்டை, அதிர்வேட்டுக்களுடன் வந்துவிடுவார்கள் ரசிகர்கள். இன்று ரஜினியின் பிறந்த நாளும் சேர்ந்து கொண்டதால், இரட்டை மடங்கு உற்சாகத்துடன் ரசிகர்கள் காசி தியேட்டருக்கு படையெடுத்தனர்.
இரவு 11 மணியிலிருந்தே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்தது. 12 மணிக்கு தாரை தப்பட்டை முழங்க, ரஜினி கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

அப்போது காசி தியேட்டரின் கொள்ளளவை விட மூன்று மடங்கு ரசிகர்கள் குவிந்துவிட்டனர் காசியில். போக்குவரத்தும் பாதிக்க ஆரம்பித்தது. எனவே டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் தவிர, மீதி அனைவரையும் வெளியேற்றியது தியேட்டர் நிர்வாகம். மீண்டும் 12.30 மணிக்கு ரசிகர்களை உள்ளே அனுமதித்தனர்.
அளவுக்கு அதிகமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முண்டித் தள்ளியதில் காசி தியேட்டரின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இதனால் நள்ளிரவுக் காட்சி நிறுத்தப்பட்டது. 1 மணி நேரம் கழித்து காட்சி ஆரம்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications