கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உறுதி செய்யப்படும்: ஆளுநர் ரோசய்யா
சென்னை: கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உறுதி செய்யப்படும் என ஆளுநர் ரோசய்யா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்தார்.
தமிழகத்தின் 15வது சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது. கூட்டத் தொடரை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் ரோசய்யா தனது உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார். மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என்றார்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றார். கச்சத்தீவை மீட்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும் கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உறுதி செய்யப்படும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மா மருந்தகம், அம்மா பசுமை பண்ணைக்கடை, அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடரும் என்று கூறிய அவர், இலவச கால்நடை, ஆடுமாடு அளிக்கும் திட்டம் நீடிக்கும் என்று கூறினார்.
வரும் ஆண்டுகளில் 16 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய ஆளுநர் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடரும் என்றும் கூறினார். அனைத்து தரப்பினரும் சமூக பொருளாதார வளர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்தார்.