தமிழகத்தில் எங்குமே விஜய்யின் 'கத்தி'யை திரையிடக் கூடாது: திருமா எச்சரிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான கத்தி என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாகத் தெரிய வருகிறது. இந்தப் படத்தை லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஈழத்தைச் சேர்ந்த சுபாஷ்கரனும், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகனும் இணைந்து தொழில் செய்து வருவதாக செய்திகள் வருகின்றன.
இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவோடு தொழில் ரீதியாக நட்புறவு கொண்டுள்ள சுபாஷ்கரன், தமிழ்த் திரையுலகில் முதலீடு செய்வது தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகின் மூலம் தமிழக அரசியலில் ஊடுருவ ராஜபக்சே முயற்சிப்பதாகவும், தமிழகத்தில் இளம் தலைமுறையினர் சிங்கள இனவெறிக்கு எதிராக அணி திரண்டு விடக் கூடாது என்பதற்காகவும் இதுபோன்ற முயற்சிகள் நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, கத்தி திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது. இது நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை ஆகாது. இது தமிழின விரோதி ராஜபக்சேவுக்கு எதிரான கோரிக்கை என்பதை புரிந்து கொண்டு திரைப்பட வெளியீட்டாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications