ஜெ. படத்தை சட்டசபையில் திறப்பதும், ஆட்டோ சங்கர் போட்டோ வைப்பதும் ஒன்று: ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்
சட்டசபையில் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: சட்டசபையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைப்பது சட்டவிரோதமானது. ஒரு குற்றவாளியின் புகைப்படத்தை வைப்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் எடப்பாடி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார். பிரதமரை சந்தித்த பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தமிழக சட்டமன்றத்தில் திறக்க உள்ளோம் என கூறினார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைப்பது சட்ட விரோதமானது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரின் புகைப்படத்தை சட்டசபையில் வைப்பதென்பது ஜனநாயகத்தை மீறிய செயல் என்று கூறினார்.
சட்டசபையில் மிகப் பெரிய தலைவர்களான காமராசர், பெரியார், ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி போன்ற தலைவர்களின் புகைப்படத்துக்கு அருகே குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்கக் கூடாது'' என்றார்.
மேலும், ''அப்படித்தான் வைப்போம் என்றால் ஐஜி அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோசங்கரின் புகைப்படங்களை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவே இது தவிர்க்கப்பட வேண்டும்'' என கூறினார்.