தெலுங்கு விவகாரத்தில் சீமான் உடனடியாக தீர்வு காண வேண்டும்: நாகராஜ்
சென்னை: தெலுங்கு இன மக்களை இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
'மொழியால் மாறுபட்டாலும்,உணர்வால் தமிழர்களாக பல மொழி பேசுகின்ற மக்களும் ஒற்றுமையாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்குமொழி பேசுகின்ற மக்கள் தமிழகத்தின் பல இடங்களில் ஒன்றுகூடி நடிகர் சீமானின் பேச்சுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போன்ற தலைவர்களை, முன்உதாரணமாக வைத்து, இளைஞர்கள் ஆர்வத்தோடு அரசியலில் பங்கெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் முன்னோடிகளை வரலாற்று ரீதியாக குற்றம் சாட்டுவதும், அதற்காக கேள்வி கேட்கின்ற இளைஞர்கள் தாக்கப்படுவதும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யார்செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இளைஞர்களை நாகரீக அரசியலுக்கு வழிநடத்த வேண்டியது சீமான் போன்றவர்களுடைய முக்கிய கடமையாகும். தற்போது கொந்தளித்துப்போயிருக்கும் தெலுங்கு பேசும் மக்களுடைய மனக்குமறலை அன்பால் அரவணைத்துச் செல்ல வேண்டிய கடமை நடிகர் சீமான் அவர்களுக்கு உள்ளது. இதை மேலும் முற்ற விடாமல், நடிகர் சீமான் அவர்கள் உடனடியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்''என்று நாகராஜ் தெரிவித்துள்ளார்.