கொடநாடு எஸ்டேட் கொலை.. சயனிடம் நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா மீண்டும் விசாரணை
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனிடம் நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா மீண்டும் விசாரணை நடத்தினார்.
குன்னூர்: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனிடம் நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா மீண்டும் விசாரணை நடத்தினார்.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ஆம் தேதி 11 பேர் உள்ளே நுழைந்தனர். அதைத் தடுக்க முயன்ற காவலாளிகளை சரமாரியாக தாக்கினர். அப்போது ஓம்பகதூர் உயிரிழந்துவிட்டார். மற்றொரு காவலாளி கிஷன்பகதூரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதற்காக டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிபிசிஐடிக்கு வழக்கு செல்லாத வகையில் இவர்கள் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.

வைரம், வைடூரியம் கொள்ளை
இந்நிலையில் எஸ்டேட் பங்களாவில் இருந்து இதுவரை 3000 சவரன் தங்க நகைகளும், வைரம், வைடூரியம் உள்ளிட்ட உயர் ரக கற்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக ஒரு பரபரப்பு கிளம்பியது. தற்போதைய கொள்ளைச் சம்பவத்தின்போது ஜெயலலிதா அறையில் 3 சூட்கேஸ்களில் இருந்த ஆவணங்கள் கொள்ளை போனதால் அதில் உயில்கள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

திடுக் விபத்துகள்
இந்நிலையில் போலீஸார் கேரளாவை சேர்ந்த 9 பேரை ஒவ்வொருவராக கைது செய்தனர். இதனிடையே எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய தொடர்புடைய கனகராஜ் மற்றும் சயன் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இதில் சேலம், ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்துவிட்டார். அவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநராவார்.

உயிர் பிழைத்த சயன்
மற்றொரு நபர் சயன், பாலக்காட்டிலிருந்து காரில் மனைவி, மகளுடன் தப்ப முயன்றபோது டேங்கர் லாரி மோதியதில் மனைவியும், குழந்தையும் பலியாகிவிட்டனர். குத்துயிரும் கொலை உயிருமாக மீட்கப்பட்ட சயன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். அப்போது தூக்க கலக்கத்தில் விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எஸ்.பி. விசாரணை
இந்நிலையில் கனகராஜ் உயிரிழந்த இடத்தில் ஆய்வு நடத்திய நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா கோவை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சயனிடம் விசாரணை மேற்கொண்டார். அடுத்தடுத்து விபத்துகள் நடைபெறுவதால் எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளியின் பெயர் வெளிவராமல் இருக்க இது போன்று சதி திட்டம் தீட்டப்படுவதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications