ஜெ.வின் கொடநாடு பங்களாவில் கறுப்பு பணத்தை கொள்ளையடித்தது மாவோயிஸ்டுகள்? பகீர் தகவல்கள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற காவலாளி படுகொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா தான் உயிரோடு இருந்த காலத்தில் பெரும்பாலான நாட்களை கொடநாட்டில் தான் செலவிட்டு வந்தார். கொடநாட்டில் இருந்து தான் அரசு நிர்வாகம் இயங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
அந்த அளவிற்கு ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் விரும்பி வாழ்ந்து வந்தார். அவர் மறைந்த செய்தி கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பெரும் துக்க செய்தியாக இருந்தது. ஜெயலலிதாவின் சொத்துகளை யார் பராமரிக்கிறார்கள் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலம் நீடிக்கும் நிலையில் நேற்று அதிகாலை கொடநாடு பங்களாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
திடுக் தகவல்
படுகாயமடைந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை மற்றும் கொள்ளை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உலா வருகின்றன. ஜெயலலிதா மரணத்தின் மர்மமே இன்னும் விலகாத நிலையில் அவரது எஸ்டேட் காவலர் மர்ம மரணம் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கறுப்புபணம் கொள்ளையா?
கொடநாடு எஸ்டேட்டில் அதிக அளவில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. இந்த செய்தியறிந்து எல்லையோரத்தில் நடமாடி வரும் மாவோயிஸ்ட்டுகள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றும், அதை தடுக்க வந்த போது காவலாளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உயிலைத் தேடி
மற்றொருபுறம் ஜெயலலிதாவின் உயில் இந்த பங்களாவில் இருப்பதாகவும் அதனை கைப்பற்றுவதற்காகவே யாரோ சிலர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் உயில் தொடர்பாக இதுவரை எந்த ஒரு தகவலுமே இல்லாத நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடி பதிவே இல்லையா?
கொடநாடு எஸ்டேட்டுக்குள் எங்குமே சிசிடிவி கேமிரா இல்லாததால் கொள்ளை மற்றும் கொலைக்கான காரணம் தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனராம். இதனால் எஸ்டேட் பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.