நீதிபதி கர்ணன் எங்கே?... சென்னை, காளஹஸ்த்தி, தடா என அலையும் கொல்கத்தா போலீஸ்!
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் ஆந்திர மாநிலம் தடாவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார் காளஹஸ்த்தியையடுத்து தடா விந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கர்ணன் நீதித்துறையையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது குறித்து நீதிபதிகள் விவாதித்தனர்.

பின்னர் கர்ணனை நீதிபதியாக பார்க்காமல், ஒரு குடிமகனாக பார்த்து நீதிமன்ற அவமதிப்பு செய் குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை உடனே அமல்படுத்தும்படி மேற்குவங்க போலீஸ் டிஜிபி-க்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று முன்தினம் இரவே கொல்கத்தாவில் இருந்து கிளம்பி விமானம் மூலம் சென்னை வந்துவிட்டார். அவர் சென்னையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கி நேற்று காலை நிருபர்களைச் சந்தித்து பேசினார். ஆனால் அவர் தெரிவித்த எந்த கருத்தும் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஊடகங்கள் வெளியிடவில்லை.
இன்று காலை முதலே அவர் தங்கியிருந்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார் உத்தரவு நகலுடன் விமானம் மூலம் சென்னை வந்தனர். 1995ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்த நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் வரும் ஜூன் 11-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக நீதிபதி ஒருவரை கைது செய்ய உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிபதி கர்ணன் நள்ளிரவே காளஹஸ்தி சென்று விட்டதாக தகவல் வெளியானதால் அவரைத்தேடி கொல்கத்தா போலீசாரும் காளஹஸ்த்தி சென்ற நிலையில் அவர் அங்கு இல்லாததால் நீதிபதி கர்ணனை தேடி போலீசார் தடா வந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications