சின்னாபின்னமாகும் சிறுவாணி அணை சாலை.. வெட்டப்படும் மரங்கள்.. அதிர்ச்சியில் கோவை!
சிறுவாணி அணை செல்லும் சாலை விரிவாக்கத்திற்கு மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையின் அடையாளமாக உள்ள சிறுவாணி அணை செல்லும் சாலையில் விரிவாக்கப்பணிக்காக பசுமையாக காட்சியளிக்கும் அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட உள்ளதற்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் மற்றும் கோவை மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கோவையின் முக்கிய அடையாளமாக உள்ளது சிறுவாணி தண்ணீர். இந்த சிறுவாணி தண்ணீர் இருக்கும் சிறுவாணி அணைப்பகுதிக்கு செல்லும் போதே முற்றிலும் குளுமையும். பசுமையும் நிறைந்து சாலைகள் காணப்படும்.
இந்த சூழலில், சிறுவாணி செல்லும் சாலையில், வெள்ளிங்கிரி, ஈஷா யோகா மையம், சாடிவயல், கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல அதிகளவிலான சுற்றுலா பயணிகளும், முக்கியஸ்தர்களும் அதிகளவில் வருகின்றனர். இதனால் இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது துவங்கி உள்ளது. இதற்காக இந்த பகுதியில் உள்ள 83 மரங்களை விரிவாக்க பணிக்காக வெட்டுவதற்கு வருவாய் துறையினர் முடிவெடுத்து உள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

பாதிக்கப்படும் குளுமையான சூழல்
இந்த சாலை நெடுஞ்சாலையாக இல்லாத போதிலும், வாகன எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக காளம்பாளையம் பகுதியில் இருந்து இருட்டுப் பள்ளம் பகுதி வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை அகலப்படுத்த உள்ள நிலையில், மரங்களை வெட்டுவதன் மூலமாக இங்கு உள்ள குளுமையான சூழலில் என்பது முற்றிலும் பாதிக்கப்பட்டு , வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிறைந்த பகுதியாக மாறி விடும் என இங்கு உள்ள பொதுமக்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பழமை மரங்கள் இனி வராதே!
மொத்தம் 140 மரங்கள் வெட்டுவதாக இருந்த நிலையில் தற்போது 83 மரங்கள் வரை வெட்ட உள்ளனர். நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் இந்த பகுதியில் உள்ள நிலையில் , அதுபோன்ற மரங்களை இனி வருங்காலத்தில் உருவாக்க முடியாத சூழலில் இருக்கும் நிலையில் மரங்களை வெட்டாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் இந்த பகுதியில் குறைவாகவே உள்ளதாகவும், சாலைகள் ஏற்கனவே விரிவாக்கம் செய்து உள்ள நிலையில் மேலும் விரிவாக்கம் செய்யும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்படும் குளுமையான சூழல்
மரங்களை வெட்டுவது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும்பொழுது, எந்த வித மரங்களையும் வெட்டாமல் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு இணையாக பல மரங்களை வைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு பணிகளை செய்ய வேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்று
சாலைகள் விரிவுபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றுதான். சாலைகள் விரிவுபடுத்தப்பட்டால்தான் தொழில் வளர்ச்சியும், சுற்றுலா வளர்ச்சியும் சாத்தியமாகும் என்பதும் உண்மைதான். அதற்காக மரங்களை வெட்டி வீழ்த்துவது முறையல்ல. மரங்களை வெட்டாமல் சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்து, வேறு வழியில்லாவிட்டால்தான் மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அப்படி மரத்தை வெட்ட முடிவெடுத்தால், ஒரு மரத்தை வெட்டுவதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து பராமரிக்க வேண்டும் என்று பலமுறை தீர்ப்புகளில் வலியுறுத்தி வந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையாவது பின்பற்ற முயல வேண்டும். எனவே, நமது மாநிலம் இன்று எதிர்கொண்டு வரும் வறட்சிக்கும், பருவநிலை மாற்றத்திற்கும் மரங்கள் வெட்டப்பட்டதுதான் முக்கிய காரணம் என்பதை மனதில் வைத்து வருவாய்த்துறை செயல்படுமாறு சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications