அடிக்கடி விபத்து.. கந்திக்குப்பத்தில் மேம்பாலம் தேவை... போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்
அடிக்கடி விபத்து நடைபெறும் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்திய மக்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கிருஷ்ணகிரி: கந்திக்குப்பத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவதால் மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்திய மக்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்திக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை திருமண வீட்டை சேர்ந்தவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
பஸ் நிறுத்தம் அருகில் கார் வந்தபோது அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாலையை கடக்க முயன்றனர். இதை பார்த்த டிரைவர் அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டு பார்த்தார். ஆனால் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் இரு சக்கரத்தில் வந்த இருவர் மீது மோதியதுடன், நடந்து சென்ற திருமண கோஷ்டியினர் மீது மோதியது.

4 பேர் பலி
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். தொடர் விபத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காருக்கு தீவைத்து கொளுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video


போலீஸ் தடியடி
அப்போது அவர்களிடம் சமாதானம் பேசிய போலீஸார் பேச்சு தோல்வி அடைந்ததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். அப்படியும் போலீஸார் விடாமல் துரத்தி சென்று அடித்தனர்.

கோரிக்கை விடுத்தும்...
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் நடைபெறும் விபத்துகளில் மாதத்துக்கு 3 முதல் 4 பேர் வரை உயிரிழக்கின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

வேகத்தடை கூட இல்லை
நாங்கள் போராட்டம் நடத்தும்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனரே தவிர, குறைந்தபட்சம் வேகத்தடை கூட இதுவரை அமைக்கவில்லை என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications